“அண்ணாமலை கொள்கை பிரச்சனையை தனிநபர் பிரச்சினையாக மாற்றுகிறார்” – விசிக எம்எல்ஏ ஷா நவாஸ்!

அண்ணாமலை கொள்கை பிரச்சனையை தனிநபர் பிரச்சினையாக மாற்றுவதாக விசிக எம்எல்ஏ ஷா நவாஸ் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருமுல்லைவாசலில் புதிய பெண்கள் மதரசா  திறப்பு விழா நடைபெற்றது. இதில்  விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் பங்கேற்று, அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது,  “இந்தியா அரசு 22 மொழிகளை இந்திய மொழியாக ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் மத்திய அரசு இந்தி சமஸ்கிருத மொழிகளுக்கு மட்டும் ஏன் முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கிறது. இரண்டு மொழிகளை தூக்கிப்பிடித்து கொண்டு மற்ற மொழிகளை ஓரங்கட்டுவதே ஒரு கொள்கையாக மத்திய அரசு அரசு கடைபிடிக்கிறது.

மும் மொழிக் கொள்கை எப்படி ஏற்றுக் கொள்வது. இந்தக் கேள்விக்கு பதில் சொல்லாத அண்ணாமலை அவர்  சிபிஎஸ்இ பள்ளி நடத்துகிறார், அவர் குழந்தைகள் அந்த பள்ளியில் பயிலுகின்றனர் என மடைமாற்றுகிறார்.
ஒரு கொள்கை ரீதியான பிரச்சனையை தனிநபர் பிரச்சினையாக அண்ணாமலை மாற்றுகிறார். பாஜகவை தவிர அத்தனை கட்சிகளும் இந்தி மொழி திணிப்பை எதிர்த்து வருகிறது. அன்புமணி மற்றும் அதிமுக கட்சிகளை சேர்ந்தவர்கள் சிபிஎஸ்சி பள்ளி நடத்தவில்லையா?  அவர்களது பிள்ளைகள் வேறு மொழி படிக்கவில்லையா?

ஒட்டுமொத்த தமிழ்நாடே சேர்ந்து ஒரு கருத்தில் இருப்பது என்றால் அதை பார்க்க வேண்டும்.  அதை எதிர்கொள்வதற்கு துணிவில்லாமல் மடை மாற்றுவதற்கு அண்ணாமலை வேலை செய்கிறார். மும்மொழிக் கொள்கையை ஏன் எதிர்க்கிறோம் என்றால், தமிழ் மொழியை தாய்மொழியாக
கொண்டுள்ள மக்கள் 22 மொழிகளில் ஒரு மொழியை வைத்தால் அது எப்படி சாத்தியம். 22 மொழிகளுக்கு மட்டுமல்ல  தமிழை தாய் மொழியாக கொண்டவர்களுக்கும் இந்தியை தாய் மொழியாக கொண்டவர்களுக்கும் பொதுவான மொழி ஆங்கிலம்தான்.

நிர்மலா சீதாராமன் கடைசி பட்ஜெட்டில் 22 மொழிகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்க
உள்ளார் என விவாதத்திற்கு வர அண்ணாமலை தயாராக உள்ளாரா?
இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்பட்ட நிலையில்
தமிழுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கி உள்ளனர் என வாதத்திற்கு வர தயாரா?
முற்போக்கான மாநிலம் விழிப்புணர்வு கொண்ட மாநிலம் எப்படி ஏமாற முடியும்.  தேன் தடவிய வார்த்தைகள் மூலம் மும்மொழிக் கொள்கையை சொன்னாலும் அது இந்தி திணிப்பு என புரிந்து கொண்ட தமிழ்நாடு ஏமாறாது”

இவ்வாறு விசிக மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் தெரிவித்துள்ளார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.