#Anna university | காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை !

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் காவல் ஆணையர் அருண் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி கடந்த மாதம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இது தொடர்பாக போலீசார் ஞானசேகரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பாலியல் வன்கொடுமை வழக்கையும், முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்த வழக்கையும் விசாரிக்க 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து உத்தரவிட்டனர்.

மேலும் விசாரணை ஆரம்பகட்ட நிலையில் உள்ளபோது அரசு அனுமதி இன்றி செய்தியாளர் சந்திப்பை நடத்தி, வழக்கு குறித்த முக்கிய தகவல்களை பகிர்ந்த சென்னை காவல் ஆணையர் அருணுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உத்தரவிடப்பட்டது.

உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், “அண்ணா பல்கலைகழக மாணவி வன்கொடுமை FIR ஆவணம் எவ்வளவு நேரம் டவுன்லோட் செய்யும் வகையில் இருந்தது? மாணவி தொடர்பான விவரங்களை வெளியிட்டது யார்?” என்று கேள்வி எழுப்பினர்.

மேலும் அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், சென்னை காவல் ஆணையர் மீதான உயர்நீதிமன்றத்தின் கருத்துகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கும் இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.