ஆந்திர பிரதேசத்தின் புதிய தலைநகராக விசாகப்பட்டினத்தை முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி தேர்ந்தெடுத்தற்கான காரணங்களை பின்வருமாறு காண்போம்.
ஆந்திர பிரதேசத்தில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், விசாகப்பட்டினத்தை ஆந்திர பிரதேசத்தின் புதிய தலைநகராக முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி டெல்லியில் நடைபெற்ற சர்வதேச தூதரகக் கூட்டமைப்பு கூட்டத்தில் அறிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
2015ஆம் ஆண்டில், ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மாநிலத்தின் தலைநகராக அமராவதிவை அறிவித்தார். இருப்பினும், 2020ஆம் ஆண்டில், ஆந்திரப் பிரதேச அரசு அமராவதி, விசாகப்பட்டினம் மற்றும் கர்னூல் ஆகிய மூன்று தலைநகரங்களை உருவாக்க திட்டமிட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம், ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் அமராவதியை தலைநகராக உருவாக்க உத்தரவு பிறப்பித்தது.
அமராவதியை நில மோசடியின் மையமாக மாற்றியதாக, ஆளும் அரசு முந்தைய ஆட்சியை தொடர்ந்து குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது, வைசாக் என அழைக்கப்படும் கடலோர நகரமான விசாகப்பட்டினம் தலைநகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் தலைநகராக விசாகப்பட்டினம் தேர்ந்தெடுக்கபட்டதற்கான சிறப்பம்சங்கள்:
1. இந்தியாவிலேயே வைசாக் மற்றும் கங்காவரம் ஆகிய இரண்டு பெரிய துறைமுகங்களை கொண்ட ஒரே நகரம் இதுவாகும். 1933ல் திறக்கப்பட்ட விசாகப்பட்டினம் துறைமுகம், 2022ல் கையாளப்பட்ட சரக்குகளின் அளவின் அடிப்படையில் இந்தியாவின் முதல் ஐந்து துறைமுகங்களில் இடம்பெற்றது. 2009ல் திறக்கப்பட்ட கங்காவரம், 21 மீட்டர் ஆழத்துடன் இந்தியாவின் ஆழமான துறைமுகமாக உள்ளது.
2. ஆகஸ்ட் 2022ல் இந்தியாவிலேயே முதன்முறையாக, காம்போசிட் இன்டோர் ஷூட்டிங் ரேஞ்சை (CISR) விசாகப்பட்டின கிழக்கு பிராந்திய கடற்படையின் ஐஎன்எஸ் கர்ணாவில், துணை தளபதி பிஸ்வஜித் தாஸ்குப்தா திறந்து வைத்தார். இந்நகரம் கிழக்கு பிராந்திய கடற்படையின் தலைமையகமாகவும் உள்ளது.
3. கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் வங்காள விரிகுடாவிற்கும் இடையே பொதிந்துள்ளளதால், விசாகப்பட்டினம் ‘கிழக்கு கடற்கரையின் பொக்கிஷம்’ என அழைக்கப்படுகிறது. மேலும், இது ஆந்திரப் பிரதேசத்தின் மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாகவும், இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய நகரமாகவும் உள்ளது.
4. 1969ஆம் ஆண்டு இந்தியக் கடற்படையால் வாங்கப்பட்ட முதல் நான்கு நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்றான ஐஎன்எஸ் குர்சுரா 1971ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில் முக்கிய பங்காற்றியது. இந்த கப்பல் 2002ல் விசாகப்பட்டினத்தின் ராமகிருஷ்ணா கடற்கரையில் நீர்மூழ்கிக் கப்பல் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. இது தெற்காசியாவின் முதல் மற்றும் உலகின் இரண்டாவது நீர்மூழ்கிக் கப்பல் அருங்காட்சியகமாகும்.
5. விசாகப்பட்டினத்தில் 1941ஆம் ஆண்டு ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவப்பட்டது. இது இந்தியாவின் முதல் மற்றும் பழமையான கப்பல் கட்டும் தளமாகும்.
6. இந்தியாவின் முதல் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் அரிஹந்த், விசாகப்பட்டினத்தில் உள்ள கப்பல் கட்டுமான தளத்தில் மேம்பட்ட கப்பல் தொழில்நுட்பத்தின் மூலம் கட்டமைக்கப்பட்டது.
7. எஸ்.எஸ்.ராஜமௌலி தனது ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தில் அல்லூரி சீதாராம ராஜு என்னும் சுதந்திர போராட்ட வீரரை மையப்படுத்தி இயக்கியிருந்தார். அல்லூரி சீதாராம ராஜு இளம்வயதில் அவரது தாயின் சொந்த ஊரான விசாகப்பட்டினத்தில் வசித்தது குறிப்பிடத்தக்கது.
8. விசாகபட்டினத்தில் பல கடற்கரைகள், அருங்காட்சியகங்கள், கோயில்கள் அமைந்துள்ளதால் இது ஒரு சுற்றுலா தளமாகவும் உள்ளது. இந்நகருக்கு சிட்டி ஆஃப் டெஸ்டினி என்ற சிறப்பு பெயரும் உள்ளது.
இத்தனை சிறப்புகளையும் கருத்தில் கொண்டே ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி, அம்மாநிலத்தின் புதிய தலைநகராக விசாகப்பட்டினத்தை அறிவித்துள்ளார்.
– புவி