ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கே.எஸ்.தென்னரசு, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்று சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். வெறும் 46 வயதே ஆன திருமகன் ஈவேராவின் மறைவு தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு அதற்கு பிப்ரவரி 27ல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பளார்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அதிமுக முன்னாள் எம்எல்ஏ -வும், ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளராக இருந்து வரும் கே.எஸ். தென்னரசுவை இன்று வேட்பாளராக அறிவித்தார்.
இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளரான தென்னரசு, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார். எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்ற பிறகு, செய்தியாளர்களை சந்தித்து பேசிய தென்னரசு, ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி வாய்ப்பு நன்றாகவே உள்ளதாக தெரிவித்துள்ளார்.
- பி. ஜேம்ஸ் லிசா









