ஆந்திரா, தெலங்கானா கனமழை: முதலமைச்சர்களின் நிவாரண நிதிக்கு தலா ரூ.50 லட்சம் – #JrNTR அறிவிப்பு!

ஆந்திரா, தெலங்கானாவில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் ஜூனியர் என். டி. ராமராவ் தலா ரூ. 50 லட்சத்தை இரு மாநில முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்குவதாக…

ஆந்திரா, தெலங்கானாவில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் ஜூனியர் என். டி. ராமராவ் தலா ரூ. 50 லட்சத்தை இரு மாநில முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த கனமழையால் இரு மாநிலங்களிலும் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் 17 பேர் ஆந்திராவை சேர்ந்தவர்கள், 16 பேர் தெலங்கானாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது. இதனால் ஆறு, குளங்கள், ஏரிகள் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. சுமார் 62,000 எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, வாழை, தக்காளி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.

விஜயவாடா, மொகல்ராஜபுரம், சுண்ணாம்பு மலையில் இடைவிடாமல் பெய்த பலத்த மழையின் காரணமாக மலையில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் அங்கிருந்த வீடுகளின் மீது விழுந்ததில் வீடுகள் தரைமட்டமாகியது. மேலும், ஆந்திரா, தெலுங்கானாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் பல இடங்களில் தண்டவாளங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதனால் ஆந்திரா, தெலுங்கானாவில் செப்டம்பர் 6ம் தேதி வரை 438 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 137 ரயில் சேவைகள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : Paralympics2024 | பேட்மிண்டன் போட்டியில் வெண்கலம் வென்றார் தமிழக வீராங்கனை #NithyaSreSivan!

இதற்கிடையே, நடிகர் ஜூனியர் என்டிஆர் தலா ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்குவதாக தனது சமுக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் பதிவிட்டிருப்பதாவது :

“அண்மையில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பெய்த கனமழையால் இரண்டு மாநிலங்களில் மிகவும் பாதித்துள்ளது. இந்த துயரத்தில் இருந்து மக்கள் விரைவில் மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறேன். வெள்ளப் பேரிடர் நிவாரணத்திற்காக எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக தலா 50 லட்சம் ரூபாயை ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில முதலமைச்சர்களின் நிவாரண நிதிக்கு வழங்குகிறேன்”

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.