அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: டிஜிபி.க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு டிஜிபி நான்கு வாரத்தில் பதில் அளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விழுப்புரத்தில்…

விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு டிஜிபி நான்கு வாரத்தில் பதில் அளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விழுப்புரத்தில் அமைந்துள்ள அன்பு ஜோதி ஆசிரமத்தில் தங்கியிருந்த பெண்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆசிரமத்தை நடத்தி வந்தவர்களாலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இதுதொடர்பாக பேசிய மகளிர் ஆணையம் மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்துள்ள நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணையமும் தற்போது தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

இதையும் படிக்க: நிலம் கையகப்படுத்தும் பணியில் என்எல்சி நிர்வாகம்: பாதுகாப்புக்காக போலீஸார் குவிப்பு

நாளிதழ்கள் ஊடகங்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம் இதுதொடர்பாக தமிழ்நாடு டிஜிபி, தமிழ்நாடு தலைமைச் செயலாளர் ஆகியோர் நான்கு வார காலத்திற்குள் இந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து விரிவான பதில் அளிக்க வேண்டும் எனவும், இடைப்பட்ட காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதேனும் நிவாரணம் வழங்கியிருந்தால் அது குறித்த விவரங்களையும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறையினர் தனிப்படை அமைத்து சம்பந்தப்பட்ட ஆசிரமத்திற்கு நேரில் சென்று விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் நேர்மையான விசாரணையாக நடைபெற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.