44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியின் தொடக்க விழா மிக பிரமாண்டமாக சில தினங்களுக்கு முன் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திரையுலகப் பிரபலங்கள், சர்வதேச செஸ் வீரர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
செஸ் விளையாட்டுப் போட்டியில் இரண்டு நாட்களும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த ஒலிம்பியாட் போட்டியில் மிக இளம் வயதில் ஒரு வீராங்கனை களமிறங்கி விளையாடி வருகிறார். அவரது பெயர் ராண்டா செடர். இவர் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த வீராங்கனை ஆவார்.
இன்று தனது முதலாவது ஆட்டத்தில் விளையாடிய அந்த இளம் வீராங்கனை முதல் கேமில் வெற்றியை ருசித்தார்.
இந்த செஸ் ஒலிம்பியாடில் ராண்டா செடர் தான் மிக இளம் வயது வீராங்கனையாவார். இவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இவரிடம் சர்வதேச செஸ் கூட்டமைப்பு பிரதிநிதி யூ-டியூப் சேனலுக்காக நேர்காணல் செய்தார்.
முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றது எப்படி இருந்தது என்று எழுப்பிய கேள்விக்கு சிறப்பாக இருந்தது என்று தாய்மொழியில் இளம் வீராங்கனை பதிலளித்தார். அவருடன் மேலும் இரண்டு பாலஸ்தீனிய வீராங்கனைகளும் இருந்தனர். அவர்கள் இந்தியாவுக்கு நாங்கள் வருவது இதுவே முதல் முறை. மிகச் சிறந்த நாடு இந்தியா. செஸ் போட்டி சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.








