தபால்காரரைப் போல மாஜிஸ்திரேட்டுகள் செயல்படக் கூடாது – நீதிமன்றம் காட்டம்

ஆவணங்களை சரியாக பரிசீலிக்காமல் புகார் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிபதிக்கு, தபால்காரரை போல செயல்படக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் காட்டமாக பதில் அளித்துள்ளது.   கொரோனா ஊரடங்கு காலத்தில் முக கவசம்…

ஆவணங்களை சரியாக பரிசீலிக்காமல் புகார் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிபதிக்கு, தபால்காரரை போல செயல்படக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் காட்டமாக பதில் அளித்துள்ளது.

 

கொரோனா ஊரடங்கு காலத்தில் முக கவசம் அணியாமல் சென்ற பெண் வழக்கறிஞர் மற்றும் அவரது கணவரை வழிமறித்த போலீசார், முக கவசம் அணியுமாறு அறிவுறுத்தினர். அப்போது அவர்கள் வாக்குவாதம் செய்ததால், வழக்கறிஞரின் கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 

ஆனால், தன்னை தாக்கியதாக பெண் வழக்கறிஞரின் கணவர், வடபழனி காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் புகார்மனு தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில், ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்ய விருகம்பாக்கம் போலீசாருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

இந்த உத்தரவை எதிர்த்து ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், போலீசார் தாக்கியதற்கு ஆதாரமாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பெற்றதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட மருத்துவ சான்றிதழில் பெண் வழக்கறிஞரும், அவரது கணவரும் தாக்கப்பட்டார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனவும், அது டாக்டர்கள் எழுதிக் கொடுத்த வைட்டமின் மாத்திரை சீட்டு என்பதைக் கூட பார்க்காமல், இயந்திரத்தனமாக சைதாப்பேட்டை நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்தது.

ஆவணங்களை சரியாக பரிசீலிக்காமல், புகார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டு, தபால்காரரை போல மாஜிஸ்திரேட்டு செயல்பட கூடாது எனவும், இதுபோல புகார் மனு தாக்கல் செய்யும்போது, அதுகுறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அறிவுறுத்திய நீதிமன்றம், காவல் ஆய்வாளரை பழிவாங்க அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யும்படி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

 

  • – இரா.நம்பிராஜன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.