தமிழ்நாட்டில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதை தடுக்கக் கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் 9,360 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் இருந்து ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் செய்து வருகிறது. இந்த நிலையில், பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தியில் முன்னணியில் உள்ள, குஜராத்தின், ‘அமுல்’ நிறுவனம், தமிழ்நாட்டில் உள்ள வடமாவட்டங்களில் பால் கொள்முதல் செய்யும் பணியை தீவிரப்படுத்தி உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கொள்முதல் செய்யப்பட்ட பாலை பெங்களூருவில் விநியோகிக்கவும், பால் கொள்முதல் அதிகரிக்கும் போது தமிழ்நாட்டில் விநியோகிக்கவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. லிட்டருக்கு 2 ரூபாய் அதிகம் வழங்கப்படும் என்றும், உடனடியாக கொள்முதல் தொகை வழங்கப்படும் என்றும் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை அமுல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதனால் பால் உற்பத்தியாளர்கள் அமுல் நிறுவனத்திற்கு பால் கொடுக்க வாய்ப்புள்ளதாகவும், ஆவின் கொள்முதல் தொகையை இழுத்தடிக்காமல் உடனடியாக வழங்கினால், உற்பத்தியாளர்கள் அமுல் நிறுவனத்திடம் செல்லமாட்டார்கள் எனவும் பால் உற்பத்தியாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக நேற்று நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டது.
இந்த நிலையில், நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியை அடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதை தடுக்கக் கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, இன்று கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:
அமுல் நிறுவனம் இதுநாள் வரையில் தங்களது தயாரிப்புகளை தமிழ்நாட்டில் உள்ள அவர்களுடைய விற்பனை நிலையங்கள் வாயிலாக மட்டுமே விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில், பால் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் அந் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதால் எழும் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி, மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாகத் தலையிட்டு, இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்.
பிற மாநிலங்களில் திறம்படச் செயல்படும் பால் கூட்டுறவு சங்கங்களைப் போலவே, தமிழ்நாட்டிலும் ஊரகப் பகுதிகளிலுள்ள பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோரின் நலனுக்காக 1981-ம் ஆண்டு முதல், மூன்றடுக்கு பால் கூட்டுறவு அமைப்பு திறம்பட செயல்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் தலைமைக் கூட்டுறவு விற்பனை இணையமாக செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில், ஆவின் கூட்டுறவு இணையத்தின் கீழ், 9,673 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அச்சங்கங்கள் நாளொன்றுக்கு 35 லட்சம் லிட்டர் பாலினை 4.5 இலட்சம் உறுப்பினர்களிடமிருந்து கொள்முதல் செய்கின்றன. இதன் வாயிலாக, பால் உற்பத்தியாளர்களுக்கு ஆண்டு முழுவதும் லாபகரமான மற்றும் சீரான விலை கூட்டுறவு சங்கங்களால் உறுதி செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம், பால் உற்பத்தியை அதிகரிக்கவும், நிலைநிறுத்தவும், கால்நடைத் தீவனம், தீவனம், தாது உப்புக் கலவை, கால்நடை சுகாதாரப் பராமரிப்பு மற்றும் கால்நடைகளுக்கான இனப்பெருக்க சேவைகளையும், இடுபொருட்களையும் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கி வருவதுடன், தரமான பால் மற்றும் பால் பொருட்களை நுகர்வோருக்கு மிகக்குறைந்த விலையில் வழங்குவது உறுதி செய்யப்படுகிறது.
கிராமப்புற பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும், நுகர்வோரின் ஊட்டச் சத்தினைப் பூர்த்தி செய்வதிலும் ஆவின் நிறுவனம் முக்கியப் பங்காற்றுகிறது.
இந்தச் சூழ்நிலையில், அமுல் நிறுவனம், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குளிரூட்டும் மையங்கள் மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை நிறுவியுள்ளது. தமிழ்நாட்டில், கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் மூலம் பால் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளது குறித்தும் அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.
இந்தியாவில், மாநிலங்களுக்குள் ஒருவருக்கொருவர் பால் உற்பத்திப் பகுதியை மீறாமல், தங்களது கூட்டுறவுச் சங்கங்கள் செழிக்க பால் கொள்முதலை அனுமதிப்பது வழக்கமாக இருந்து வரும் நிலையில், அமுல் நிறுவனம் மேற்கொள்ளும் இத்தகைய எல்லை தாண்டிய கொள்முதல், ‘வெண்மை புரட்சி’ என்ற கொள்கைக்கு எதிராக அமைவதுடன், நாட்டில் பால் பற்றாக்குறை உள்ள சூழ்நிலையில், நுகர்வோர்களுக்கு மேலும் சிக்கல்களை ஏற்படுத்தும் .
அமுல் நிறுவனத்தின் இத்தகைய செயல்பாடு, பல்லாண்டுகளாக கூட்டுறவு மனப்பான்மையுடன் செயல்பட்டுவரும் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்திப் பகுதியில் பாதிப்பினை ஏற்படுத்தும்.
அமுல் நிறுவனத்தின் இத்தகைய செயல், பால் மற்றும் பால் பொருட்களைக் கொள்முதல் செய்து விற்பனை செய்யும் கூட்டுறவு சங்கங்களிடையே ஆரோக்கியமற்ற போட்டியை உருவாக்கிவிடும். மாநிலங்களில் செயல்படும் கூட்டுறவு அமைப்புகள், பால்வளத் துறையின் வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கி வருவதுடன், பால் உற்பத்தியாளர்களை அத்தொழிலில் ஈடுபடுத்துவதற்கும், ஊக்குவிப்பதற்கும் உதவுவதாகவும், தன்னிச்சையான விலை உயர்விலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்கின்றன.
எனவே, இந்த விவகாரத்தில், ஒன்றிய உள்துறை அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்திப் பகுதிகளில், அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதைத் தடுத்து நிறுத்திட வேண்டும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா