திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த கண்ணிகைப்பேர் கிராமத்தில் இயங்கி வந்த தனியார் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் எதிர்பாரா விதமாக அமோனியா நச்சு வாயு கசிந்து விபத்து ஏற்பட்டது. இதில், பணியில் இருந்த தொழிலாளர்கள் 83 பேர் மயக்கம் அடைந்தனர். பலருக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல் பாதிப்புகள் ஏற்பட்டது.
பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, மஞ்சங்காரணை வேல்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சிறுணியம் வெங்கடேஸ்வரா மருத்துவமனை, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்தில் ஏற்கனவே 15 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள இறால் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா வாயு கசிந்து ஏற்பட்ட விபத்தில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒருவர் மேலும் உயிரிழந்துள்ளார். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை தற்போது 16 ஆக உயர்ந்துள்ளது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த கபிதா ஜுங்கா(18) பெண் தொழிலாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.




