29 அங்கீகரிக்கப்பட்ட அமெரிக்க பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் கலந்து கொள்ளும் அமெரிக்க கல்விக் கண்காட்சி-2023 சென்னையில் செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுதொடர்பாக சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அமெரிக்கா-இந்தியா கல்வி அமைப்பின் (யுஎஸ்ஐஇஎஃப்) அங்கமான எஜுகேஷன் யுஎஸ்ஏ, சென்னை அமெரிக்க துணைத் தூதரகத்துடன் இணைந்து, செப்டம்பர் 2, 2023 சனிக்கிழமை, பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை அமெரிக்க பல்கலைக்கழக கல்விக் கண்காட்சி 2023ஐ சென்னையில் உள்ள ஹோட்டல் ஹயாட் ரீஜென்சியில் நடத்துகிறது.
அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் உள்ள 29 அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் பிரதிநிதிகளை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நேரில் சந்திக்கும் வாய்ப்பை இந்த கண்காட்சி வழங்கும்.
அமெரிக்காவில் இளநிலை, முதுநிலை படிக்க விரும்பும் மற்றும் ஆராய்ச்சி திட்டங்களைத் மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு இந்த கண்காட்சி பயனுள்ளதாக இருக்கும். இந்த கண்காட்சியில் பங்கேற்க கட்டணம் இல்லை, ஆனால் பதிவு செய்ய வேண்டியது அவசியம். நீண்ட வரிசைகளைத் தவிர்க்க மாணவர்கள் முன்கூட்டியே பதிவு பதிவு செய்ய வேண்டும். அதற்கு https://bit.ly/EdUSAFair23PR என்ற இணையதள பக்கத்தில் முன்பதிவு செய்யும்படிக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தகவல் அமர்வுகள் மதியம் 1.15 மணிக்குத் தொடங்கி தொடர்ந்து நடைபெறும். கண்காட்சியில் பங்கேற்கும் அமெரிக்க உயர்கல்வி நிறுவனங்கள் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் இயங்கிவருபவை. மேலும், பல்வேறு துறைகளிலும் இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் நிலைகளில் கல்வித் திட்டங்களை அவை வழங்குகின்றன. பல்துறை படிப்புகள் மற்றும் பல்வேறு அமெரிக்க உயர்கல்வி நிறுவனங்களுக்கான சேர்க்கை விதிமுறைகளைப் பற்றி கண்காட்சிக்கு வருகை தருபவர்கள் அறிந்து கொள்ளலாம்.
இந்த கண்காட்சியில் அமெரிக்க பல்கலைக்கழகங்கள், எஜுகேஷன் யூஎஸ்ஏ ஆலோசகர்கள் மற்றும் அமெரிக்க தூதரக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதன் மூலம், அமெரிக்க உயர்கல்வி பற்றிய விரிவான தகவல்களை மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும். தாங்கள் விரும்பும் படிப்பினைத் தேர்ந்தெடுக்கவும், அமெரிக்க மாணவர் விசா விண்ணப்ப செயல்முறையைப் பற்றி அறிந்து கொள்ளவும், அமெரிக்க படிப்பு மற்றும் வாழ்க்கை பற்றிய பிற அம்சங்களை அறிந்துகொள்ளவும் இக்கண்காட்சி உதவிகரமாக இருக்கும்.
“இந்திய மாணவர்களின் கனவுகளை அடைய உதவும் வாய்ப்பாக இந்த கண்காட்சி அமையும். உங்கள் விருப்பங்களைத் தேர்வு செய்யும் முயற்சியில் இந்தியாவில் உள்ள எந்த அமெரிக்க மையத்தில் நீங்கள் ஈடுபட்டிருந்தாலும், அல்லது எஜுகேஷன் யூஎஸ்ஏ மூலமாக உயர்கல்விக்கு விண்ணப்பிக்கும் பணியில் இருந்தாலும், அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நீங்கள் காணக்கூடிய உலகத் தரம் வாய்ந்த கல்வி மற்றும் இதர வசதிகளை பெற ஆர்வம் கொண்டிருந்தாலும் வெற்றிக்கான பாதையில் உங்களுக்கு வழிகாட்டுவதில் அமெரிக்கா பெருமை கொள்கிறது, என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி கூறினார்.
“இந்திய மாணவர்கள் மிகவும் விரும்பித் தேர்ந்தெடுக்கும் மிகப் பிரபலமான சர்வதேச கல்வி மையமாக அமெரிக்கா தொடர்ந்து திகழ்கிறது. அமெரிக்க உயர்கல்வி நிறுவனங்களில் படிக்க விரும்பும் மாணவர்களுக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் அளித்து உதவுவதில் எஜுகேஷன் யூஎஸ்ஏ பல ஆண்டுகளாக முனைப்புடன் செயலாற்றி வருகிறது.
இந்த ஆண்டு, அங்கீகாரம் பெற்ற பல்வேறு அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் பிரதிநிதிகளை ஒரே இடத்தில் இந்திய மாணவர்கள் நேருக்கு நேர் சந்தித்து உரையாடும் எங்களது பிரபலமான கல்விக் கண்காட்சியை மீண்டும் நடத்துவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்,
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சரியான தகவல்களைப் பெறவும், அமெரிக்கக் கல்லூரி வளாகங்களில் கிடைக்கும் பல்வேறு வகையான கல்வி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் நாங்கள் அன்புடன் அழைக்கிறோம்,” என்று அமெரிக்கா-இந்தியா கல்வி அமைப்பின் செயல் இயக்குநர் ஆடம் க்ரோட்ஸ்கி கூறினார்.
ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 3, 2023 வரை, இந்தியாவில் ஹைதராபாத், மும்பை, புனே, புது தில்லி, அகமதாபாத், கொல்கத்தா, சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய எட்டு நகரங்களில் இந்தக் கண்காட்சிகள் நடைபெறுகின்றன.
மேலும் தகவல்களுக்கு https://www.facebook.com/EducationUSAindia என்ற முகநூல் பக்கத்தையோ, அல்லது educationusaindia@usief.org.in என்ற மின்னஞ்சலையோ அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.