அம்பேத்கரின் 133-வது பிறந்தநாள்: விஜய் மக்கள் இயக்கத்தினர் மரியாதை..!

அண்ணல் அம்பத்கரின் 133-வது பிறந்த நாளை முன்னிட்டு, நடிகர் விஜயின் உத்தரவுப்படி, விஜய் மக்கள் இயக்கம் சார்பில், அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம்…

அண்ணல் அம்பத்கரின் 133-வது பிறந்த நாளை முன்னிட்டு, நடிகர் விஜயின் உத்தரவுப்படி, விஜய் மக்கள் இயக்கம் சார்பில், அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் விஜய். இவர் என்ன செய்தாலும் அதை திருவிழா போன்று கொண்டாடி தீர்த்துவிடுவார்கள் அவரது ரசிகர்கள். அப்படிப்பட்ட இவர் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி, அரசியலிலும் தீவிரமாக இறங்கி செயல்பட வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் கனவுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இது தொடர்பாக தனது பழைய பேட்டி ஒன்றில், தளபதி விஜய்யே கூறியிருக்கிறார். அதன் ஒரு பகுதியாக, தனது ரசிகர் மன்றமான விஜய் மக்கள் இயக்கம் சார்பில், பல்வேறு மக்கள் நல பணிகளை அவ்வப்போது தன்னுடைய ரசிகர்கள் மூலமாக செய்து வருகிறார்.

இந்த நிலையில், அரசியலில் ஈடுபடும் தன்னுடைய முதல் முயற்சியாக, டாக்டர் அம்பேத்கரை, கையில் எடுத்த நடிகர் விஜய், சட்டமேதை அம்பேத்கரின் 133 வது பிறந்த நாளான இன்று, அவரின் சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று அனைத்து நிர்வாகிகளுக்கும் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 133-வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில், தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள், அந்தந்த ஊர்களில் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

அந்த வகையில், இன்று  விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில், கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது . இதில் ஏராளமான மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள அம்பேத்கரின் மணிமண்டபத்தில், தென்சென்னை மாவட்ட தலைவர் கே.வி.தாமு தலைமையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில், சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர் பர்வேஸ் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்தது மரியாதையை செலுத்தியதோடு, இனிப்புகள் வழங்கி அம்பேத்கரின் பிறந்த நாளை கொண்டாடினர்.

மேலும் நாளை முதல் (ஏப்ரல் 15 ) மே மாதம் வரை ஒவ்வொரு மாவட்டவாரியாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெறுகிறது. விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு புதிய படிவம் விரைவில் வழங்கப்பட உள்ளது. அந்த படிவத்தில் அரசியல் இயக்கம் தொடங்குவதற்கான ஒப்புதல் மற்றும் ஆலோசனைகள் குறித்து பேச இருப்பதாக மக்கள் இயக்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். இதில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான படிவமும் வழங்கப்பட உள்ளது. ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.