பங்குனி பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு 5 நம்பிசுவாமிகள் சித்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மற்றும் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் அழகியநம்பிராயர் கோயில் உள்ளது.
ஆண்டு தோறும் இக்கோயிலில் பங்குனி மாதம் பிரம்மோற்சவ திருவிழா வெகுவிமரிசையாக நடப்பது வழக்கம். அதன்படி இந்தாண்டு திருவிழா கடந்த 8ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடந்து வரும் நிலையில் , விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 5 நம்பி சுவாமிகள் சித்தர்களுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையொட்டி நம்பிசுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு அதனை தொடர்ந்து இரவில் கோயிலில் இருந்து நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளி கொண்ட நம்பி, திருமலைநம்பி, திருப்பாற்கடல் நம்பி ஆகிய 5 நம்பிசுவாமிகளும் தனித்தனியாக 5 கருட வாகனங்களில் எழுந்தருளி நிகழ்ச்சிக்காக புறப்பட்டனர்.
ரதவீதிகள் வழியாக, திருவீதி உலா வந்த 5 நம்பிகளும் நேற்று அதிகாலை 3-20 மணிக்கு மேலரதவீதியில் மேற்கு நோக்கி எழுந்தருளி, மகேந்திரகிரி மலையை கடாஷித்து அங்கு வாழும் தேவகந்தர்வ சித்தர்களுக்கு திருக்காட்சி அளித்தனர்.
அப்போது நம்பிசுவாமிகளுக்கு சிறப்பு தீப ஆராதனைகளும் நடத்தப்பட்டது. இதை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோவிந்தா என்று பக்தி முழக்கமிட்டனர்.
—-கா.ரு்பி.