இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பாராளுமன்ற உறுப்பினருமான கம்பீரின் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கும் அமைப்பிற்குப் பிரபல திரைப்பட நடிகரான அக்ஷய் குமார் ரூபாய் ஒரு கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.
நாட்டில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் பல திரை பிரபலங்கள் பொது மக்களுக்கு உதவ முன்வருகின்றனர். அதில் சமீபத்தில் இந்தி திரைப்பட முன்னணி நடிகரான அக்ஷய் குமார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌதம் கம்பீர் நடத்தி வரும் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் அமைப்பிற்கு ரூபாய் ஒரு கோடி நிதி அளித்து உதவியிருக்கிறார். இதனால் அளவுகடந்த மகிழ்ச்சியடைந்த கௌதம் கம்பீர் தனது ட்விட்டர் பக்கத்தில் அக்ஷய் குமாருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்வீட்டில், “எனது கௌதம் கம்பீர் அமைப்பிற்கு ரூபாய் ஒரு கோடி நிதியுதவி வழங்கிய அக்ஷய்க்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இந்தத் தொகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, மருந்து மற்றும் ஆக்சிஜன் வழங்குவதற்காக உபயோகப்படுத்தப்படும்” என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு முன் நடிகர் அக்ஷய் குமார் பிரதமர் நரேந்திர மோடியின் ரிலீஃப் ஃபண்டிற்கு (கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அமைப்பு) ரூபாய் 25 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.







