2017 மார்ச் மாதம் 20க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகின. ஆனால் வெற்றிபெற்ற சில படங்களின் வரிசையில் மாநகரம் படமும் இடம்பெற்றிருந்தது. அறிமுக இயக்குநர் லோகேஷ் கனகராஜா? யார் அவர் என முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தார்.
ஓரிரு படங்களில் மட்டுமே நடித்திருந்த, பிரபலமடையாத இரண்டு கதாநாயகர்களை வைத்து கதையை மட்டுமே நம்பி வெற்றி பெற்ற லோகேஷ் கனகராஜ், 5 பிரச்சனைகளை வெவ்வேறு கோணத்தில் சொல்லி ஒரு புள்ளியில் இணைத்த விதம் ‘ வாவ்’ போட வைத்திருந்தது. அதிலும் ஒரே இரவில் சென்னை என்கிற மாநகரத்தில் நடக்கும் கதையை சொன்ன விதம் ரசிகரகளின் ஆதரவைப் பெற்று வெற்றி வாகை சூடியது.
தனது அடுத்த படமான கைதியை கார்த்தியை வைத்து இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகி ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரே எதிர்பார்ப்பை எகிற வைத்தது. அந்த படமும் வசூலை வாரிக்குவிக்க, அடுத்து விஜய், விஜய் சேதுபதியை எதிரெதிரே மோத வைத்து பட்டையை கிளப்பிய மாஸ்டர், கமல்ஹாசனின் சினிமா வரலாற்றிலேயே அதிக வசூலைக் குவித்த விக்ரம் என லோகேஷ் கனகராஜின் கிராஃப் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. அடுத்து மீண்டும் விஜயை வைத்து தளபதி 67 படத்தில் கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், அதிகாரப்பூரவ அறிவிப்பு கூட இன்னும் வெளியாகாத நிலையில் பல கோடிக்கு அந்த திரைப்படத்தின் ஓடிடி உரிமை விற்பனை செய்யப்பட்டதாக கோடம்பாக்கமே வெப்பத்தில் தகிக்கிறது.
இப்படி லோகேஷ் கனகராஜ் என்ன செய்ய போகிறார், மீண்டும் கேங்க்ஸ்டர் கதையா என்கிற பரபரப்புக்கு மத்தியில், கோவையில் நடைபெற்ற விழாவில் லோகேஷ் கனகராஜிடம் அஜித்குமாரின் எந்த படத்தை மீண்டும் இயக்க விரும்புகிறீர்கள் என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டது. பெரிதும் யோசிக்காமல் லோகேஷ் சொன்ன பதில் அந்த படம் தீனா என்று. இதுதான் அஜித் ரசிகர்கள் மத்தியில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
இயக்குநர் முருகதாசின் அறிமுக படமான தீனா அஜித்துக்கு கம்பேக் கொடுத்த படம். இன்று முருகதாஸ் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டார். அப்படி இருக்க லோகேஷ் கனகராஜ் மீண்டும் அந்த படத்தை இயக்கினால் அது எவ்வளவு மாஸாக இருக்கும் என்பதே ஹாட் டாபிக். அதில் மீண்டும் அஜித்தே நடித்தால் அது இன்னும் அதகளமாக இருக்கும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு….
– தினேஷ் உதய்







