மராட்டிய மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் சென்ற தனி விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. புனே மாவட்டம் பாராமதி பகுதியில் அஜித் பவார் சென்ற விமானம் காலை 8.45 மணிக்கு தரையிறங்கும்போது விபத்தில் சிக்கி தீப்பிடித்தது. விமானம் விபத்திற்குள்ளான நிலையில், அஜித் பவார் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், விமான விபத்தில் மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்ததாக விமானத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது. விமானம் கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில் அஜித் பவார் உட்பட 3 பயணிகளும், 2 விமானிகளும் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் அஜித் பவார் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் மற்றும் பலர் ஒரு துயரமான விமான விபத்தில் இறந்ததை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். சோகத்தின் அளவை ஜீரணிக்க கடினமாக உள்ளது. சரத் பவார் மற்றும் இந்த கொடூரமான விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







