போயிங், ஏர்பஸ் நிறுவனங்களிடமிருந்து 470 விமானங்களை வாங்க உள்ளது ஏர் இந்தியா நிறுவனம். அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு பொருளாதார ரீதியாக இது பெரிது என கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்திய நிறுவனங்கள், அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்களிடமிருந்து பணி ஆணைகள் வரும் என எதிர்பார்த்து காத்துக்கிடந்த நிலை தலைகீழாக மாறி விட்டது. இப்போது இந்திய நிறுவனங்களிடமிருந்து பணி ஆணைகள் வராதா என வெளிநாட்டு நிறுவனங்கள் ஏங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஒரு காலத்தில் டாடாவுக்கு சொந்தமான ஏர் இந்தியா, அரசு நிறுவனமாக்கப்பட்டு 60 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் டாடா வசமானது. இந்நிலையில், ஏர் இந்தியாவின் விமானச் சேவையை மேம்படுத்தி, உலகம் முழுவதும் விரிவாக்கம் செய்வது, இந்தியாவில் முக்கிய வர்த்தகப் பகுதிகளை இணைக்க உள்ளது.
ஏர் இந்தியா மீண்டும் டாடா வசமான முதல் ஆண்டை ஒட்டி, ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களையும் போயிங் நிறுவனத்திடம் இருந்து 220 விமானங்களையும் வாங்க பணி ஆணைகளை வழங்கியுள்ளது. இந்த 470 விமானங்களின் மொத்த மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் 6.5 லட்சம் கோடி ரூபாய்.
இதையும் படியுங்கள் : தனுஷின் 50-வது படத்திற்கு இசையமைக்கும் இசைப்புயல் ? – லேட்டஸ்ட் அப்டேட்!
இதன்மூலம் வருவாய், வேலைவாய்ப்பு, உற்பத்தி எனப் பலவிதமான பலன்களை அந்நாடுகள் பெறுகின்றன. இதன்காரணமாக, கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார மந்த நிலையில் தவிக்கும் உலக நாடுகளின் தலைவர்கள், டாடா நிறுவனத்திற்கு பாராட்டையும், நன்றியையும் தெரிவித்து வருகின்றனர்.
போயிங்கிடமிருந்து, 220 விமானங்களை வாங்கும் ஒப்பந்தம் மூலம், 10 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் அமெரிக்காவின் பல மாநிலங்களில் உருவாகும் என்றும் அதிகப்படியானோருக்கு பல விதங்களில் பலன் அளிக்கும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், பிரிட்டன் நாட்டின் ரோல்ஸ் ராய்ஸ் இன்ஜின் கொண்டு வடிவமைக்கப்பட்ட 250 ஏர்பஸ் விமானங்களை ஏர் இந்தியா வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் பிரிட்டனில் வேலைவாய்ப்பு, ஏற்றுமதி, பொருளாதாரம் மேம்பட இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் வர்த்தகச் செயலாளர் கெமி படேனோச் தெரிவித்துள்ளனர்.
ஏர்பஸ் நிர்வாகி குய்லூம் ஃபௌரி பேசும் போது, ஏர் இந்தியாவின் மறுமலர்ச்சிக்கு ஏர்பஸ் உதவுவது ஒரு வரலாற்றுத் தருணம் எனறார். இந்த ஒப்பந்தம் இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையிலான நட்புறவில் ஒரு புதிய மைல்கல் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்தார்.
மீண்டும் மகாராஜாவாக ஏர் இந்தியா மாறும் என டாடா குழுமம் கூறி வருவது உண்மையாவது போல், அந்நிறுவனத்திற்கு புதிய ஒப்பந்தம் அமைந்துள்ளது. 3 வல்லரசு நாடுகளின் பொருளாதாரத்திற்கே ஏர் இந்தியா உத்வேகம் அளிக்கும் என்பது இந்தியர்களுக்கு பெருமையே…..
– ரா.தங்கபாண்டியன், நியூஸ் 7 தமிழ்