குற்றால பேரூராட்சி தலைவருக்கான மறைமுகத் தேர்தல் அதிமுகவைச் சேர்ந்த கணேஷ் தாமோதரன் 5 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற்ற
உள்ளாட்சி தேர்தலில் குற்றாலம் பேரூராட்சியில் திமுக சார்பில் 4 உறுப்பினர்களும், அதிமுக சார்பில் 4 உறுப்பினர்களும் வெற்றி பெற்றனர். அதன் பின்னர் பிப்ரவரி 26-ல் நடைபெற்ற மறைமுக தேர்தலின் போது அதிமுகவை சேர்ந்த 4 உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றனர். திமுகவினர் வராத நிலையில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து ஏப்ரல்29-ம் தேதி மறைமுக தேர்தல் நடைபெற்றது. அதிலும் திமுக உறுப்பினர்கள் கலந்து கொள்ளாததால் தேர்தல் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது.
தற்போது குற்றாலத்தில் சீசன் களை கட்டி உள்ள நிலையில், குற்றாலம் பேரூராட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் குறித்து பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
இந்நிலையில் இன்று பேரூராட்சி தலைவருக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இதில் திமுகவை சேர்ந்த 4 உறுப்பினர்களும், அதிமுகவை சேர்ந்த 4 உறுப்பினர்களும் பங்கேற்றனர். அப்போது அதிமுக சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கணேஷ் தாமோதரனுக்கு ஆதரவாக திமுக உறுப்பினர் ஒருவர் வாக்களித்ததால் 5 ஓட்டுக்களை பெற்று அதிமுகவை சேர்ந்த கணேஷ் தாமோதரன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று மதியம் நடைபெற உள்ள நிலையில் இந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.