அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூலை 11ம் தேதி மீண்டும் பொதுக்குழு நடைபெறும் என அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்தார். இதனையடுத்து, பாதியிலேயே வெளியேறினார் ஓ.பன்னீர்செல்வம்.
இந்த நிலையில் ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் இன்று மனு அளித்துள்ளார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், “நேற்று வரை ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையெழுத்திட்டு முறைப்படி பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்” என்று தெரிவித்தார்.
ஜூலை 11ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுவுக்கு ஒருங்கிணைப்பாளர் அனுமதி தேவையில்லை என்ற சி.வி.சண்முகம், “ஐந்தில் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கொடுத்தால் பொதுக்குழுவைக் கூட்டலாம். நேற்றோடு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது. இன்று முதல் ஓ.பன்னீர்செல்வம் பொருளாளர், எடப்பாடி பழனிசாமி தலைமை நிலையச் செயலாளர் மட்டுமே” என்றார்.
உட்கட்சியில் குழுக்களுக்கிடையே உள்ள பிரச்னையில் நீதிமன்றம் தலையிட அதிகாரம் இல்லை எனவும், பொதுக்குழு விதிகளின்படி நடைபெற்றுள்ளது. அவைத்தலைவர் முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களால் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருங்கள், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று காட்டமாக கூறிய அவர், “நீதிமன்ற உத்தரவை நாங்கள் மீறவில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு பொதுக்குழுவில் அங்கீகரிக்கப்படவில்லை. கட்சி விதிகளை மாற்றவும் திருத்தவும் பொதுக்குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. பொது மன்னிப்பு வழங்கி மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். இரட்டை இலை சின்னத்தை முடக்கியவர், அதிமுகவை அழிக்க நினைத்தவர் அவர்” என்று குற்றச்சாட்டுக்களை அடுக்கினார்.







