சசிகலா தான் அதிமுகவை வழிநடத்த வேண்டும் என தி.நகரில் உள்ள சசிகலா இல்லத்தின் முன்பு அமமுக மற்றும் அதிமுக தொண்டர்கள் கோஷம் எழுப்பினர்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை கடந்த 10 நாட்களாக நீடித்து வரும் நிலையில், நேற்று அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்த பொதுக் குழு கூட்டத்தில் தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படாமல், ஒற்றைத் தலைமை தீர்மானத்துடன் அடுத்த பொதுக் குழுக் கூட்டமானது ஜூலை 11-ஆம் தேதி நடைபெறும் என்று அதிமுக அவைத் தலைவர் அறிவித்தார். ஒற்றை தலைமைக்குத் தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பில் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில் பொதுக்குழுக் கூட்டம் நடத்துவதைக் கண்டித்து, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொதுக்குழுக் கூட்டத்தை வெளிநடப்பு செய்தனர்.
அதிமுகவில் கடந்த 10 நாட்களாக நீடித்து வரும் இந்த ஒற்றைத் தலைமை பிரச்சனை
தற்போது வரை ஒரு முடிவு எட்டப்படாத நிலையில், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் இருவருமே
தலைமைக்கு தகுதி இல்லாதவர்கள். சசிகலா தான் அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆக வேண்டும் என 30க்கும் மேற்பட்ட அமமுக தொண்டர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் சென்னை தி.நகரில் உள்ள சசிகலா இல்லத்தின் முன்பு கோஷம் எழுப்பினர். அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலாதான் என்றும், உடனடியாக பொதுச் செயலாளர் பதவியை ஏற்க வேண்டும் என்றும் கழகத்தை அவரால் மட்டுமே காக்க முடியும் என்றும் தொடர்ந்து கோஷங்களை எழுப்பி வந்தனர்.
-ம.பவித்ரா







