தமிழ்நாட்டில் நீட் தேர்வு நுழைய அனுமதித்தது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு தான் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை கலைஞர் நகரில் உள்ள அரசு மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், பாதுகாப்பு கவச உடையணிந்து சிகிச்சையில் இருந்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடம் நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு 2 ஆயிரத்துக்குள் கீழ் கொண்டு செல்லப்படும் என கூறினார். ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மாணவர்களின் கல்விக் கட்டணம் தொடர்பாக இருமுறை பேசப்பட்டுள்ளதாகவும், இந்த கல்லூரியை நடப்பு கல்வி ஆண்டு முதல் அரசே ஏற்று நடத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டிற்கு நீட்டை நுழையவிட்டது எடப்பாடி பழனிசாமி என குற்றம்சாட்டிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், 7 புள்ளி 5 சதவீத மருத்துவ இட ஒதுக்கீடு கிடைக்க காரணம், ஆளுநர் மாளிகையை திமுக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதுதான் என கூறினார்.







