அதிமுக-வை மீட்டு எடுக்கும் இலக்குக்கான பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என தெரிவித்த அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், அதிமுக-விற்கு மடியில் கனம் உள்ளதால், மக்கள் பிரச்சனைகளை பேசுவதில்லை என சாடியுள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக-வை மீட்டு எடுக்கும் இலக்குக்கான பயணம் தொடரும் என நம்பிக்கை தெரிவித்தார். அந்த இலக்கை அடையும் வரை போராடுவோம் என்றார்.
ஓராண்டு திமுக ஆட்சியில் மக்கள் ஏமாற்றும் அடைந்துள்ளதாக குற்றம்சாட்டிய டி.டி.வி.தினகரன், திராவிட மாடல் என கூறிகொண்டு திராவிடர்கள் தலைகுனிவு மாதிரி நடைபெறுகிறது என தெரிவித்தார். விடியல் ஆட்சி என்பது மக்களை ஏமாற்றி, பொய்யாக செயலாற்றி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

அதிமுக-வை மீட்டு எடுப்பதில் சசிகலா பாதை வேறு என்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பாதை வேறு என கூறிய அவர் அதிமுக-விற்கு மடியில் கனம் உள்ளதால் மக்கள் பிரச்சனைகளை பேசுவதில்லை என்றார். மேலும் பேசிய அவர், ரவுடிகள் தற்போது திமுக கொடியை கட்டிக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் வலம் வருவதாகவும் கூறினார். திமுக-விற்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இந்து கோயில்களையும் கண்காணிக்கும் பொறுப்பு உள்ளது என்றும் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்







