அதிமுக பொதுக்குழு; ஓபிஎஸ் வழக்கு விரைவில் விசாரணை

அதிமுக பொதுக்குழுவை எதிர்த்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் நாளை மறுதினம் விசாரிக்கிறது. அதிமுக பொதுக் குழுவுக்கு தடை விதிக்கக் கோரி ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு மற்றும் பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து…

அதிமுக பொதுக்குழுவை எதிர்த்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் நாளை மறுதினம் விசாரிக்கிறது.

அதிமுக பொதுக் குழுவுக்கு தடை விதிக்கக் கோரி ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு மற்றும் பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால், சட்டப்படி பொதுக்குழுவை நடத்திக்கொள்ளலாம், விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்து, பிரதான வழக்குகளை தள்ளிவைத்திருந்தார்.

இதையடுத்து ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடத்தப்பட்டு இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி அளித்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் எனவும், விசாரணையை 2 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டுமெனவும் தனி நீதிபதிக்கு உத்தரவிட்டனர். இந்நிலையில் அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிசாமி ஆகியோர் தொடர்ந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, அவற்றை ஆகஸ்ட் 16 ம் தேதிக்கு தள்ளிவைத்தார். இதற்கிடையில் பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தொடர்ந்த வழக்குகளின் விசாரணையை 2 வாரங்களில் முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்து நீதிபதி கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. அந்த வழக்குகளை நாளை மறுநாள் (ஆகஸ்ட் 4) விசாரிப்பதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.