காதலிப்பதாகக் கூறி ரூ.30 லட்சம் ஏமாற்றியதாக குற்றச்சாட்டு- துணை நடிகை மீது காவல் நிலையத்தில் இளைஞர் புகார்

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 30 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக துணை நடிகை மீது கொடைக்கானலைச் சேர்ந்த இளைஞர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை…

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 30 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக துணை நடிகை மீது கொடைக்கானலைச் சேர்ந்த இளைஞர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவர் சொந்தமாக
யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இந்த சேனலில் கவிதைகள் தொடர்பான ஆடியோ
வீடியோ வெளியிட்டு வந்துள்ளார். இதில் நடிப்பதற்காக துணை நடிகர் ஏஜென்ட் மூலம்
திண்டுக்கல்லை அடுத்துள்ள தாடிக்கொம்புவை சேர்ந்த துணை நடிகை ஒருவர் அறிமுகமாகியுள்ளார்.  சினிமாவில் துணை நடிகையாகவும் விளம்பரங்களிலும்
நடித்து வந்துள்ள அவரை வைத்து கவிதை தொகுப்பினை வீடியோவாக எடுத்து
ஆனந்த்ராஜ் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், அந்த துணை நடிகை, ஆனந்த்ராஜிடம் அடிக்கடி செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியதாகக் கூறப்படுகிறது.  மேலும் தனது குடும்பத்துடன் கொடைக்கானலில் உள்ள ஆனந்தராஜ் வீட்டிற்கு சென்று தங்கி குடும்ப ரீதியாக நட்பாக பழகியதாகவும் கூறப்படுகிறது. இரண்டு பெண் குழந்தைகளை அழைத்துச் சென்ற அவர்,  தனது அக்காவின் குழந்தைகள் என்றும் அக்கா கணவர் வீட்டைவிட்டு சென்றுவிட்டதால் தான் வளர்ப்பதாகவும் ஆனந்தராஜிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.


இந்நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இதனையறிந்த
ஆனந்தராஜின் தாயார் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க சம்மதிக்கவே
அவர்களுக்கு திருமணம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.
ஆனால் அந்த பெண் ஆனந்தராஜை திருமணம் செய்யாமல் காலம் கடத்தி வந்துள்ளார். தனியாக வீடு எடுத்து தங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனை அடுத்து திண்டுக்கல்லில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அந்த பெண் தங்கியுள்ளார்.

அவர் கூறியதையெல்லாம் நம்பிய ஆனந்த்ராஜ், வீட்டுச் செலவுக்கு என மாதம் மாதம் ₹ 30 ஆயிரம் ரூபாயை கொடுத்து வந்துள்ளார். மேலும் தனது உடல்நிலை சரியில்லை மருத்துவ செலவிற்காக பணம் வேண்டும் எனக் கூறி,  ஒன்பது லட்ச ரூபாய் கேட்டு வாங்கியதாகவும் கூறப்படுகிறது. அத்தோடு நில்லாமல் ஆனந்தராஜிடம் ஆசை வார்த்தை கூறி எட்டு பவுன் தங்க நகைகளை வாங்கியதாகவும் புகார் எழுந்துள்ளது.  இதனைத் தொடர்ந்து ஆனந்த்ராஜ் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கூறும் பொழுதெல்லாம் அவருடன் சண்டையிட்டு காலம் தாழ்த்தி வந்துள்ளார்.  இதனால் சந்தேகம் அடைந்த ஆனந்தராஜ், அந்த பெண்ணை பற்றி விசாரித்துள்ளார். அப்பொழுது தான் அந்த துணை நடிகையின் நடத்தை சரியில்லை என்றும் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருப்பதும் அவருக்கு பிறந்தது தான் அந்த இரண்டு பெண் குழந்தைகள் எனவும் தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தன்னை ஏமாற்றி ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட ஆனந்தராஜ், தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் அந்த துணை நடிகை மீது புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரனிடமும் ஆனந்த்ராஜ் புகார் அளித்தார். தற்பொழுது இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.