அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் அதிமுக ஒருங்கிணைப்பாளரான தன்னிடம் ஒப்புதல் இல்லாமல் நடத்தப்படுவதாக கூறி ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஆகஸ்ட் 17ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுக பொதுக்குழு செல்லாது என உத்தரவிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்தனர்.
இந்நிலையில் இந்த தீர்ப்புக்கு எதிராக ஓபிஎஸ் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், ’அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் இபிஎஸ்-க்கு ஆதரவாக உள்ளனர். எனவே தற்போதைய ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு அற்பமான ஒன்று ஆகும். தொண்டர்கள் விருப்பத்திற்கேற்பவும், கட்சியின் நலனைக்கருதியும் ஒற்றை தலைமை என்பது ஏற்படுத்தப்பட்டது. கட்சியின் பொதுக்குழுவுக்கே அனைத்து அதிகாரமும் உள்ளது. எனவே அதன் முடிவே இறுதியானது. மேலும் கட்சியின் செயல்பாடுகளில் முடக்கம் ஏற்பட்டதால் தான் ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதுவே பொதுக்குழுவிலும் பிரதிபலித்தது.
ஓபிஎஸ் அதிமுக கட்சி அலுவலகத்தை சூறையாடி கட்சியின் விதிகளை மீறியுள்ளார். கட்சிக்கு எதிராக செயல்பாட்டுள்ளார். எனவே அவர் எந்த நிவாரணமும் பெற தகுதி இல்லாதவர். மேலும் கட்சி பொதுக்குழு கூட்டப்படுவதற்கு முன்னர் ஓபிஎஸ் தரப்புக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியே கட்சியின் பொதுக்குழு கூட்டப்பட்டது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.