தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வை 1.31 லட்சம் பேர் எழுதவில்லை என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 முதல் நிலை தேர்வு தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் 1080 மையங்களில் நடைபெற்றது. சென்னையில் மட்டும் 149 இடங்களில் நடைபெற்றது.
குரூப்-1 பதவியில் காலியாக உள்ள துணை ஆட்சியர் 18 இடங்களும், துணை காவல் கண்காணிப்பாளர் 26 இடங்களும், வணிகவரித்துறை உதவி ஆணையர் 25 இடங்களுக்கும், கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் 13 இடங்களுக்கும், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் 7 இடங்களுக்கும், மாவட்ட வேலைவாய்ப்பு துறை அதிகாரிகள் 3 பதவிகள் என மொத்தம் 92 இடங்களுக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்காகத் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கு 3,22,416 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இந்த தேர்வு காலை 9:30 மணி தொடங்கி மதியம் 12:30 மணி வரை நடந்தது. தேர்வுக்கு அரை மணி நேரம் முன்னதாகவே தேர்வர்கள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். தாமதமாக வருபவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்த தேர்வை எழுத 3,22,414 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் 1,90,957 பேர் மட்டுமே தேர்வை எழுதியுள்ளனர். 1,31,457 பேர் தேர்வு எழுதவில்லை என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.








