அதிமுக உட்கட்சித் தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு தடை விதிக்க கோரி அக்கட்சியின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், கடந்த 1ஆம் தேதி, நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்படுவார்கள் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையும் தேர்தலுக்கு 21 நாட்களுக்கு முன்பே, நோட்டீஸ் கொடுக்க வேண்டுமெனும் கட்சியின் விதிகள் மீறப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், உறுப்பினர் அட்டை வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், வாக்களிக்க தகுதியான உறுப்பினர்களின் பட்டியல், முறையாக தயாரிக்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டியிருந்தார். 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், தம்மை நீக்கிய பிறகு, ஏப்ரலில்தான் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆகியோரை கட்சி நிர்வாகிகளாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததாகவும், தனது நீக்கத்தையும், உட்கட்சி தேர்தலையும் ரத்து செய்து, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்து, தேர்தல் நடத்த வேண்டுமெனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுகவில் உறுப்பினரே இல்லாதவர் தேர்தல் தொடர்பாக வழக்கு தொடர முடியாது எனவும், வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்போதைய சூழலில் அதிமுக உட்கட்சித் தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது எனக் கூறிய நீதிபதி, வழக்கு தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ், தேர்தல் அலுவலர்கள் பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் 3 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.