ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக புகார் அளித்துள்ளார்.
சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி ஆகியோரும் உடனிருந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு, முன்னாள் அமைச்சர்கள் இல்லங்களில் நடைபெறும் லஞ்ச ஒழிப்பு சோதனை, சட்ட ஒழுங்கு பிரச்னை தொடர்பான பல்வேறு புகார்கள் அடங்கிய மனுவை, ஆளுநரிடம், எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
இந்த மனுவில், அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் காரணமின்றி நிராகரிக்கப்பட்டதாகவும், வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றில், அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை வகித்த இடங்களில் வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டு நிறுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆளுநரை சந்தித்தபின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பழனிசாமி, 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக ஜனநாயக படுகொலை செய்துள்ளதாகவும், அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்ற போதிலும் தோல்வி என அறிவிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், முறைகேடு நடக்கும் என்பது தெரிந்ததால்தான் தேர்தல் ஆணையம், நீதிமன்றத்தை நாடியதாகவும், நீதிமன்ற தீர்ப்பை தேர்தல் ஆணையமும், அரசும் நடைமுறைப்படுத்தவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும், சசிகலா என்ன சொன்னாலும் கவலையில்லை, பொழுது போகவில்லை என அவர் அவ்வாறு கூறுவதாகவும் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்துவது தொடர்பாக சட்டப்படி புகார் அளிக்கப்பட்டுள்ளது, அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றும் கூறினார்.