மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் ஆவணப்பட வெளியீட்டு விழாவுக்கு அதிமுக, பாஜகவிற்கு அழைப்பில்லை துரை.வைகோ.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் 56 ஆண்டு கால அரசியல் பயணம் பற்றிய குறும்படம் வெளியிடும் நிகழ்ச்சிக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் துணை பொதுச்செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோரை அழைக்க மதிமுக கட்சியின் தலைமை கழக செயலாளர் துரை வைகோ தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு வந்தார்.
அந்த சமயம் அங்கு பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, ரத்ததான முகாம் நடைபெற்றது. அதில், தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் துணை பொதுச்செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, ஆவணப் பட வெளியீட்டுக்கு அழைப்பிதழ் வழங்கினார் துரை வைகோ.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “எம்ஜிஆர் போன்று வள்ளல் மனம் படைத்தவர் விஜயகாந்த். அவர் தொடர்ந்து அரசியலில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அதோடு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவித்தேன். மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் 56 ஆண்டு கால அரசியல் வாழக்கை பற்றிய ஆவணப்படம் வெளியிடப்போகிறோம் அதற்கு அழைப்பு விடுப்பதற்காக வந்தேன்.
75 நிமிடங்கள் கொண்ட குறும்படம் வெளியிடப்பட உள்ளது. இந்த குறும்படம் எந்த இயக்கத்தையோ அல்லது எந்த நபரையோ தாக்குவது இல்லை. இந்த குறும்படம் முற்றிலும் வைகோவின் சாதனைகள், அவரின் அரசியல் பயணம் பற்றியது. இந்த நிகழ்ச்சியை முதலமைச்சர் தான் துவங்கி வைக்க உள்ளார். இதில் அதிமுக, பாஜக தவிர்த்து அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட உள்ளது. என்றாலும் நாங்கள் அதிமுகவையும், பாஜகவையும் பிரித்து பார்க்கவில்லை என அவர் பேசியிருந்தார்.







