குஜராத்தின் அகமதாபாத் நகரில் கட்டப்பட்டு வரும் கட்டுமானத்தின் லிஃப்ட் திடீரென அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
குஜராத் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. அங்கு தொழிலாளர்களை பணிக்காக ஏற்றிச் சென்ற லிஃப்ட் ஏழாவது மாடியில் இருந்து திடீரென கீழே அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் லிஃப்டில் சென்ற 8 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், பலத்த காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மண்டலம் 1இன் காவல் துணை ஆணையர் லவினா சின்ஹா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அகமதாபாத் மேயர் கே.ஜே.பர்மார் கூறுகையில், தனியார் கட்டுமானப் பணியின்போது லிஃப்ட் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் காலை 7.30 மணிக்கு ஏற்பட்டுள்ள நிலையில், காவல் துறையினருக்கு 11 மணிக்கு மேல்தான் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கட்டடம் மாநகராட்சி விதிகளுக்கு உட்பட்டு கட்டப்பட்டுள்ளதா உள்ளிட்டவை குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
-ம.பவித்ரா








