நடிகை ராதிகா நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ’தாய் கிழவி’. சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். இப்படம் சுமார் 50 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தாய்கிழவி படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு நடிகை ராதிகா பேசியதாவது :
உண்மையான வெற்றியை கொண்டாட இந்த மேடையில் நிற்கிறேன். நான் எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளமாட்டேன். 150 ரூபாய் டிக்கெட்டில் இருந்து 50 கோடி கலக்ஷென் வந்துள்ளது. இந்த படம் ஓட வேண்டும் என கமல்ஹாசன் கூறினார். இயக்குநர் சிவக்குமார் முருகேசனுக்காக இந்த படம் ஜெயிக்க வேண்டும் என கமல்ஹாசன் கூறினார்.
ஶ்ரீதர், பாலச்சந்தர், பாரதிராஜா என ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு இயக்குநர் சினிமாவுக்கு வருவார்கள். அப்படிதான், சிவக்குமார் முருகேசன். என் இத்தனை நாள் கலைப்பயணத்தில் இந்த படத்தின் வெற்றியை பார்த்தது பெரும் பாக்கியம். சித்தி சீரியல் வெற்றிக்கு ப்பிறகு இந்த படத்தில்தான் பெண்கள் கனெக்ட் ஆனதை பார்க்க முடிகிறது.
சினிமாத்துறையே குழம்பிப்போய் இருக்கிறது. தயாரிப்பாளர்கள் அனைவரும் திரையரங்குக்கு போன் செய்து உண்மையாகவே வசூல் வருகிறதா என கேட்கிறார்கள். படத்தில் கண்டென் மட்டுமே கிங் என்பதை தாய் கிழவி நிரூபித்திருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.







