செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கத்தில் 3 ஆண்டுகளுக்குப் பின் இன்று மாசிமக உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கம் அருகே ஆலம்பரைகுப்பம் கடற்கரைப் பகுதியில்
மாசி மாதத்தின் பௌர்ணமி நாளான மாசி மகமானது நடைபெறும். பல ஆண்டுகளாக சுற்றுவட்டாரப் பகுதிகளான 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள கோவில்களிலிருந்து உற்சவர் சிறப்பு அலங்காரத்துடன் கடற்கரைப் பகுதிக்கு வந்து நீராடி தீர்த்தவாரி உற்சவம் விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
கடந்த 2020ம் ஆண்டு உள்ளூர் பிரச்சினைக் காரணமாக, மாசி மக உற்சவம் நடத்தக் காவல்துறை அனுமதி வழங்க மறுத்ததால் நிறுத்தப்பட்டது. இதையடுத்து 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் கொரோனாத் தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு, அமல்படுத்தப்பட்டது.
எனவே கடந்த மூன்று வருடங்களாகக் கடப்பாக்கத்தில் மாசி மகத் தீர்த்தவாரி உற்சவம்
நடைபெறவில்லை. மூன்று வருடங்களுக்குப் பின் மாசி மக உற்சவம் கடப்பாக்கம் கடற்கரைப் பகுதியில் இன்று நடைபெற்றது.
உற்சவத்திற்காகக் கடற்கரை ஓரத்தில் சுற்று வட்டாரக் கிராமங்களில் இருந்து 30க்கும் மேற்பட்ட கோவில்களில் இருந்து உற்சவர்கள் சிறப்பு அலங்காரத்தில் எடுத்து வரபடுவார்கள். பிறகு கடற்கரை நோக்கி நிறுத்தப்பட்டு கடற்கரையில் இருந்து நீர் எடுத்து வரப்பட்டு நீராட்டு விழா நடத்தப்பட்டது.
மூன்று ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்றதால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து
கொண்டு சுவாமியைத் தரிசனம் செய்தனர். மேலும் கடற்கரைப் பகுதியில் தூய்மைப்படுத்தும் பணியில் இடைக்கழிநாடு பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் நூற்றுக்கும் மேற்பட்டக் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.







