தங்கக்கவச அதிகாரத்தை வழங்கக்கோரி அதிமுக சார்பில் திண்டுக்கல் சீனிவாசன் தொடர்ந்த வழக்கை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல்
செய்த மனுவில், “விடுதலைப் போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு 2014ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 13 கிலோவில் தங்க கவசத்தை வழங்கினார். இந்த தங்க கவசம் மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள வங்கியில் அதிமுக மற்றும் பசும்பொன் தேவர் நினைவாலயம் ஆகியோரின் பெயரில் லாக்கரில் வைக்கப்பட்டுள்ளது. வருடம் தோறும் அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்த நாளை முன்னிட்டு 3 தினங்களுக்கு முன்பாக தங்க கவசத்தினை வங்கியில் இருந்து எடுத்துச் சென்று பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு
அணுவித்து பின் மீண்டும் வங்கி லாக்கரில் வைப்பது வழக்கம்.
இதற்காக அதிமுக பொருளாளரும் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாலய பொறுப்பாளர்களும் வங்கியில் கையெழுத்திட்டு தங்க கவசத்தினை பெற்று செல்வார்கள். தற்போது, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தங்கக் கவசத்தினை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக கட்சியில் இருந்து நீக்கிய உத்தரவு செல்லும் என உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே, அதிமுக பொருளாளராக உள்ள தனக்கே தங்க கவசத்தினை வங்கியில் இருந்து பெறுவதற்கான அதிகாரம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், வங்கி அதிகாரிகள் தங்களிடம் தங்க கவசத்தினை ஒப்படைக்க மறுப்பு
தெரிவித்து வருகின்றனர். எனவே, 2022 அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்த நாளை முன்னிட்டு தங்க கவசத்தினை எடுத்துச் செல்ல சட்டபூர்வமாக இடைக்கால உத்தரவு வழங்கவும், வங்கி கணக்கை அதிமுக சார்பாக உபயோகப்படுத்தும் அதிகாரத்தை வழங்க வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு பவானி சுப்புராயன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, அதிமுக தரப்பில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு அதில்
கழகத்தின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார் இவர் தான்
அனைத்து வங்கி கணக்குகளிலும் தற்போது வரவு செலவுகளை செய்து வருகிறார்.
இந்நிலையில், தங்கக்கவசத்தை இவரிடம் வழங்கும் அதிகாரித்தை வழங்க வேண்டும் என வாதிட்டப்பட்டது. அதேபோல், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரு பதவிகள் உருவாக்கப்பட்டது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு தங்க கவசம் கொடுக்கக் கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் தங்கள் தரப்பையும் இந்த வழக்கில் மனுதாரராக இணைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதேபோல் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிட பொறுப்பாளர் தரப்பில்,
நீதிமன்றம் எந்த உத்தரவு பிறப்பிக்கின்றதோ அதை பின்பற்ற தயாராக இருப்பதாக
தெரிவிக்கப்பட்டது. இதேபோல் வங்கி தரப்பில் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவிற்கு கட்டுப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி, வழக்கு விசாரணையை வருகின்ற 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.








