உத்தரபிரதேச மாநிலம் மதுராவில், இறைச்சி மற்றும் மதுபானத்திற்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தடைவிதித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பைசாபாத் மாவட்டம் அயோத்தி என கடந்த 2018 ஆம் ஆண்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அப்போது அம்மாவட்டம் முழுவதும் மது, இறைச்சி போன்றவற்றை விற்பனை செய்ய யோகி ஆதித்யநாத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இந்த தடை, மாவட்டம் முழுவதற்கும் பொருந்தும் என்றும் கூறியிருந்தார். மடாதிபதிகள் மற்றும் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று இதை செய்ததாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், மதுராவிலும் மது மற்றும் இறைச்சி விற்பனைக்கு உத்தரபிரதேச அரசு தடை விதித்துள்ளது. அங்கு நடைபெற்ற கிருஷ்ணஜெயந்தி விழாவில் பங்கேற்ற யோகி ஆதித்ய நாத் இதை அறிவித்தார்.
மது, இறைச்சி விற்பனைக்கு தடை செய்வதற்கான திட்டங்களை தயாரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவித்த அவர், மது மற்றும் இறைச்சி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், மதுராவின் பெருமையை மீண்டும் உயிர்ப்பிக்க பால் விற்பனையை மேற்கொள்ளலாம் என்று பரிந்துரைத்தார். பின்னர் கொரோனா தொற்றை ஒழிக்க, பகவான் கிருஷ்ணரை வேண்டுவதாகவும் கூறினார்.
அவருடன், அமைச்சர்கள் லட்சுமி நாராயண் சவுத்ரி மற்றும் ஸ்ரீகாந்த் சர்மா ஆகியோரும் கலந்து கொண்டனர்.








