நடிகர் ஆர்.கே மனைவியை கத்திமுனையில் கட்டிப்போட்டு வீட்டிலிருந்த 200 சவரன் நகை மற்றும் மூன்று லட்சம் பணம் கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்கள்.
எல்லாம் அவன் செயல், ஜில்லா, அவன் இவன், அழகர் மலை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் ராதாகிருஷ்ணா (எ)ஆர். கே(63). இவர் தனது குடும்பத்துடன் சென்னை நந்தம்பாக்கம் டிபன்ஸ்காலனி 12வது குறுக்கு தெரு பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு ராஜி(53) என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் இன்று ராதாகிருஷ்ணா வெளியே சென்றுவிட்டதால் வீட்டில் மனைவி ராஜி மட்டும் தனியாக இருந்து வந்தார். அப்போது திடீரென மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று வீட்டிற்குள் நுழைந்து ராஜியிடம் கத்தியை காட்டி மிரட்டி கை,கால்களை கட்டிப்போட்டு வாயில் பிளாஸ்டர் ஒட்டி உள்ளனர். பின்னர் அந்த கும்பல் வீட்டின் பீரோவிலிருந்த சுமார் 200 சவரன் நகை மற்றும் 3 லட்சம் பணத்தை கொள்ளையடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றுள்ளனர்.
இது தொடர்பாக அருகிலிருந்த பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அளித்த தகவலின் பேரில் நந்தம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனை தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு பதிவுகளை சேகரித்து சென்றனர். பின்னர் வீட்டிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, நடிகர் ராதாகிருஷ்ணா வீட்டில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த நேபாள நாட்டை சேர்ந்த வாட்ச் மேன் ரமேஷ் தனது இரண்டு வட மாநில நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்வது போல் தெரியவந்தது.
இதையடுத்து ராதாகிருஷ்ணா அளித்த புகாரின் பேரில் நந்தம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மேலும் வெளிமாநிலத்திற்கு தப்பி செல்லாதவாறு விமான நிலையம், ரயில் நிலையத்திற்கு கொள்ளையர்களின் புகைப்படத்தை அனுப்பி பிடிக்குமாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.









