மறைந்த முதலமைச்சரும் நடிகையுமான ஜெயலலிதா முதலில் நடித்த படத்தின் ஹீரோ ஸ்ரீகாந்த் உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தை பூர்விகமாகவும் வெங்கட்ராமன் என்கிற இயற்பெயர் கொண்ட நடிகர் ஸ்ரீகாந்த், 1965 இல் இயக்குநர் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகம் ஆனார். இப்படத்தில்தான் ஜெயலலிதா முதன்முதலில் கதாநாயகியாக நடித்தார்.
இவர் நிறைய படங்களில் சிவாஜி கணேசன், முத்துராமன் , ஜெய்சங்கர் போன்ற நடிகர்களோடு துணைப் பாத்திரங்களில் நடித்தார். பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களோடு எதிர்நாயகனாகத் தோன்றினார். ரஜினி கதாநாயகனாக நடித்த முதல் படமான பைரவியில் முதன்மை எதிர்நாயகனாக நடித்தார்.
இவர் கதைநாயகனாக நடித்து 1974 இல் வெளிவந்த திக்கற்ற பார்வதி திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்றது.
இலக்கியம், நாடகம் உள்ளிட்டவற்றில் தொடர்ந்து ஆர்வம் செலுத்தி வந்த ஸ்ரீகாந்த் சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படத்தில் சிறப்பாக தனது நடிப்பு திறனை வெளிக்காட்டியிருந்தார்.
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரால் தமிழ் சினிமா உலகிற்கு அடையாளம் காணப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த் 12.10.2021 செவ்வாய்க்கிழமையன்று வயது முதிர்ச்சி காரணமாக காலமானார்.









