ஆவின் வளர்ச்சியை தடுக்கும் வகையில் போட்டி நிறுவனங்கள் ஆவின் பொருட்கள் குறித்து தவறான தகவல்களை பரப்புகின்றனர். இப்படி அவதூறு பரப்பும் நிறுவனங்கள் மீது சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கவுள்ளதாக என அமைச்சர் நாசர் குற்றம் சாட்டினார்.
சென்னை நந்தனத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 14 ஆவின் பணியாளர்களுக்கு மிகை ஊதியம் மற்றும் கருணை தொகையை வழங்கினார்.
பின் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அமைச்சர் நாசர், ‘இந்தாண்டு தீபாவளி பண்டிகை இனிப்பு வகைகள் விற்பனை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. இதன் மூலம் ரூ 80 கோடி வரும் என எதிர் பார்த்த நிலையில், ரூ 110 கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றும் வரும் நாட்களில் இது இன்னும் மேலும் அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், ‘ஆவின் பொருட்கள் தரம் குறித்து தனியார் போட்டி நிறுவனங்கள் சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பி வருவதாகக் குற்றம் சாட்டினார். மேலும், ஆவின் பொருள்கள் பல்வேறு கட்ட தர பரிசோதனைக்குப் பின்னர் மக்களை சென்றடைகின்றன.
எனவே ஆவின் பொருள்களில் புழு பல்லி பூச்சி உள்ளிட்ட பொருட்கள் இருப்பதாக ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை அரசியல் கட்சிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் தூண்டுதலின் பேரில் அவதூறு பரப்பவதாக குற்றம் சாட்டினார். இந்த நிறுவனங்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க கலந்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
ஆவின் இனிப்புகளுக்குப் போக்குவரத்துத் துறையில் மட்டும் 70 டன் இனிப்புகள் ஆர்டர் பெறப்பட்டுள்ளதாகவும் மேலும் பல்வேறு தனியார் நிறுவனங்களும் ஆவின் இனிப்புகளை முன்வந்து அதிக அளவில் வாங்கி வருவதாக தெரிவித்தார். விவசாயிகள் பயன்படக்கூடிய வகையில் பால் கொள்முதல் விலையை உயர்த்துவது தொடர்பாக ஒரு வார காலத்திற்குள் தமிழக முதலமைச்சர் அறிவிப்பு வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்தார்.







