கோயில்கள் முன்பு வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க
நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து அறநிலையத் துறை உறுதி அளித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும்
ஆதிகேசவலு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும், சிலைகளை கரைப்பதற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்து அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கும், பொது இடத்தில் சிலை வைப்பதற்கும் தமிழ்நாடு
அரசு தடை விதித்ததுடன், உரிய வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளதாக
தெரிவித்தார்.
கடந்த ஆண்டை போலவே, சிறிய கோயில்களின் முன்பு வைக்கப்படும் சிலைகளை, இந்து
அறநிலையத்துறையே எடுத்து, நீர்நிலைகளில் கரைக்கும் என்றும் தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.








