முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு

முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர்.  முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான…

முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர். 

முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான சாயப்பட்டரை உள்ளிட்ட 26 இடங்களில் கடந்த 22ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் முடிவில் சுமார் 20 லட்சம் ரொக்கமும், சொத்து மற்றும் முதலீட்டு ஆவணங்கள் கைப்பற்றியதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து அன்றைய தினமே இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. இதை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என ஓ.பி.எஸ் மற்றும் ஈபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.

இந்நிலையில், எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கலில் தன்னிடம் ரூ.2 கோடியே 51 லட்சத்து 91 ஆயிரத்து 378 சொத்து இருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்திருந்தார். 2021 சட்டமன்றத் தேர்தலில், ரூ.8கோடி 62லட்சத்து 35 ஆயிரத்து 648 சொத்து மதிப்பு உள்ளதாக வேட்புமனுத் தாக்கலில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் 2016 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை அவர் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது அவரது வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்தனர். இதில், அவர் அமைச்சராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக 55 சதவீதம் சொத்து சேர்த்திருப்பது தெரியவந்துள்ளது. இதனடிப்படையில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.