டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி!

டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடும் என டெல்லி அமைச்சர் கோபால் ராய் அறிவித்துள்ளார்.  நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான…

டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடும் என டெல்லி அமைச்சர் கோபால் ராய் அறிவித்துள்ளார். 

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன . இதில் பாஜக தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 இடங்களிலும், மற்றவை 17 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதில் பாஜக 240 தொகுதிகளிலும்,  காங்கிரஸ் 99 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதனால் தொங்கு நாடாளுமன்றம் அமைந்துள்ளது. எனவே, 240 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உள்ள பாஜக மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்க முடிவு செய்துள்ளது.  இதுதொடர்பாக நேற்று முன்தினம் (ஜூன் 5) டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது.  இதில் மோடி தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு கடிதங்களை கூட்டணி கட்சி தலைவர்கள் வழங்கினர்.

நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி தோல்வியடைந்த நிலையில்,  அடுத்த ஆண்டு நடைபெற இருக்கக்கூடிய டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடும் என டெல்லி அமைச்சர் கோபால் ராய் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.   டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கடந்த இருமுறையும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.