முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

திருமாவளவனுடன் கூட்டணியா..? – சீமான் பரபரப்பு பேட்டி

விசிக தலைவர் திருமாவளவனுடன் கூட்டணி அமைப்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்தார். நாம் தமிழர் கட்சி தொடங்கி 13 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு 2 அடி நீளமுள்ள தங்க வேலினை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் காணிக்கையாக செலுத்தினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான் தெரிவித்ததாவது…

“ ஜல்லிக்கட்டு குறித்து நீதிமன்றம் வழங்கியுள்ள  தீர்ப்பு வரவேற்கத்தக்கது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வெற்றி அனைத்து தமிழர்களும் கொண்டாடப்பட  வேண்டியது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெல்வதை மட்டுமே இலக்காக கொண்டு மாநிலம் முழுவதும் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம். பொதுத் தேர்வுகளில் தாய்மொழியில் குறைந்த மதிப்பெண்கள் மற்றும் குறைந்த அளவிலான தேர்ச்சி பெற்ற மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாடு என பெயர் வைத்தால் மட்டும் போதுமா? தமிழ்நாட்டில் கல்வி பயில்வதற்காக நகைகளை அடமானம் வைத்து படிக்க வேண்டிய சூழல் உள்ளது.

விஷசாராயம் குடித்து இறந்தவர்களுக்கு அரசு 10 லட்சம் உதவி நிதி உதவி செய்கிறது. இதுதான் திராவிட மாடல் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ரூபாய் பத்து லட்சம் நிதியுதவி விஷச் சாராயத்தை ஊக்குவிப்பதற்காகவா..? அதிமுக ஆட்சி காலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்புகள் ஏற்படவில்லை. அதனால் அதிமுக தப்பித்துக் கொண்டது. கள்ளச்சாராய விவகாரம் நேற்று காய்ச்சி இன்று குடித்த நிகழ்வு அல்ல பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அரசு விற்றால் சாராயம் , தனியார் விற்றால் கள்ளச்சாராயமா..?

திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற முடியாது. வடமாவட்டங்களில் திமுக வெற்றி பெற்றதற்கு திருமாவளவன் தான் காரணம். அதிமுக கூட்டணியில் பாமக இருப்பதால் திமுகவிற்கு திருமாவளவன் தேவை. ஆதலால் திருமாவளவனை கூட்டணியில் இருந்து வெளியே விட மாட்டார்கள். அதிமுக பாஜக கூட்டணி இறுதியாகிவிட்டது.

நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைப்பதை திருமாவளவன் தான் முடிவு செய்ய வேண்டும். நாம் தமிழர் கோட்பாடுகளை ஏற்று திருமாவளவன் உட்பட யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம். தமிழகத்தில் மதுவை ஒழிக்க நினைப்பவர்கள் வந்தால் மட்டுமே மதுவிலக்கு சாத்தியமாகும்.

காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக-வுக்கும் வேறுபாடு இல்லை. இருவருமே ஒன்றுதான். ஊழல் பற்றி பேச காங்கிரஸ்க்கு அருகதை இல்லை. கர்நாடகாவில் காங்கிரஸ் மேகதாது அணை கட்டுவதை திமுகவும் திருமாவளவனும் தடுக்கமுடியுமா..? மேகதாது அணையை வைத்துதான் கர்நாடகாவில் நாடாளுமன்ற வாக்கு சேகரிப்பு நடைபெறும். இன்னும் ஆறு மாதத்தில் மேகதாது அணை கட்டுவார்கள் இதை தடுக்க முடியுமா..??

நாடு கூட்டாட்சி தத்துவத்தில் உள்ளது. மாநிலத்தில் தன்னாட்சி, மத்தியில் கூட்டாட்சி வரவேண்டும்.. மாநில கட்சிகளுக்கிடையே சுழற்சி முறையில் பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்தியாவிலேயே வி.பி.சிங் ஆட்சிதான் சிறந்த ஆட்சி. மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியால் தான் சிறந்த கூட்டாட்சியை தரமுடியும்.” என  நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

துருக்கி நிலநடுக்கம்; இஸ்தான்புல் புறப்பட்டது இந்தியாவின் முதல் நிவாரணக்குழு

Web Editor

’அம்பேத்கரை இணைக்காமல், காந்தியின் வரலாற்றை எழுத முடியாது’ – விசிக தலைவர் திருமாவளவன்

EZHILARASAN D

சட்டத்தின் நோக்கம் நிறைவேறியது: 7.5% இடஒதுக்கீடு தீர்ப்பில் கருத்து

EZHILARASAN D