திருப்பத்தூரில் மது அருந்தி கொண்டே ஆட்டுக்கறி சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு!

ஜவ்வாதுமலை அருகே மது அருந்தி கொண்டு ஆட்டுக்கறியை சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை புதூர்நாடு முழலை கிராமத்தைச் சேர்ந்த கடுக்காலி என்பவரின் மகன் கோவிந்தன். இந்த நிலையில் கோவிந்தன் இன்று வீட்டின் அருகே மது அருந்தி கொண்டு ஆட்டுக்கறியை சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

அப்போது திடீரென கோவிந்தன் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது பரிசோதனை செய்த மருத்துவர்கள் கோவிந்தன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து உயிரிழந்த கோவிந்தனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த திருப்பத்தூர் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது குடித்துக் கொண்டு ஆட்டுக்கறி சாப்பிட்டவர் மயங்கி விழுந்த உயிரிழந்த
சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.