தேனியில் போலி கல்விச் சான்றிதழ் கொடுத்து 24 ஆண்டுகளாக அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த பெண்!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே போலியாக கல்வி சான்றிதழ் கொடுத்து அரசுப் பள்ளியில் 24 ஆண்டுகளாக பணி செய்து வந்ததாக பெண் மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே  ராசேந்திர…

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே போலியாக கல்வி சான்றிதழ் கொடுத்து அரசுப் பள்ளியில் 24 ஆண்டுகளாக பணி செய்து வந்ததாக பெண் மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே  ராசேந்திர நகர் ஊராட்சி ஒன்றிய  அரசு ஆரம்பப்பள்ளி உள்ளது. இங்கு தேனி பங்களாமேடு சோலைமலை ஐயர் தெருவை சேர்ந்த 47 வயதான விஜயபானு என்பவர் கடந்த 1999 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் தேதி முதல் இடை நிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

இவர் மீது தேனி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்திற்கு போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக ரகசிய புகார் வந்தது இந்த நிலையில் மாவட்ட கல்வி அலுவலகத்தில் அவரது சான்றிதழ்களை தேனி மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள்  சரி பார்த்தனர். அப்போது அவர் 12-ம் வகுப்பு சான்றிதழ் போலியாக கொடுத்து பணியில் சேர்ந்திருப்பது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் கலாவதி தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்  அலுவலகத்தில் இது குறித்து இடைநிலை ஆசிரியர் விஜயபானு மீது  புகார் தெரிவித்தார்.

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கண்டமனூர் போலீசார் அரசு நிர்வாகத்தை ஏமாற்றியது, போலி ஆவணம் தயார் செய்தது,  போலி ஆவணம் மூலம் அரசுப் பணியில் சேர்ந்தது உள்ளிட்ட 4 பிரிவுகளில்  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.