கணவர் இறந்த துக்கத்தில் கணவரின் மடியிலேயே உயிர்விட்ட மனைவி

திண்டிவனம் ஆரோவில் அருகே கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் கணவன் மடியிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள கோட்டுக்கரை காலனி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை,…

திண்டிவனம் ஆரோவில் அருகே கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் கணவன் மடியிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள கோட்டுக்கரை காலனி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை, 54 இவரது மனைவி செல்வி, 48 இவர்களுக்கு, ஸ்ரீதர் என்ற மகனும், ஸ்ரீமதி என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. இதில் ஸ்ரீதர் கோயம்புத்தூரில் தச்சு வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் ஏழுமலை உடல்நிலை சரியில்லாததால், நேற்று காலை இறந்தார். அதனால் இறுதிச்சடங்கிற்காக அவரது உடலை வீட்டில் வைத்து, அனைவரும் அழுது கொண்டிருந்தனர். அப்போது கணவர் இறந்த துக்கத்திலிருந்த செல்வி திடீரென மயக்கமடைந்தார்.

உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காகப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஆரோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் இறந்ததால் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.