காஞ்சிபுரம் அருகே முதல் நாள் கல்லுாரி சென்ற மாணவனின் இருசக்கர வாகனத்தில் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சென்னையை சேர்ந்த ராஜன் என்பவரது மகனான தம்பிதுரை சிறு வயதியிலிருந்து காஞ்சிபுரம் ஏனாத்துார் சமத்துவபுரம் பகுதியில் உள்ள பாட்டியின் வளர்ப்பில் இருந்துள்ளார். இவர் பிளஸ் டூ முடித்த நிலையில், காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நேற்று முன்தினம் முதலாம் ஆண்டு இளங்கலை அறிவியல் துறையில் சேர்ந்துள்ளார். நேற்று முதல் நாள் கல்லுாரிக்கு சென்று கட்டணம் கட்டிவிட்டு வருவதாக தனது மாமாவிடம் கூறிவிட்டு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது கல்லுாரி முடித்து வீடு திரும்பும் போது சாலையில் எதிரே வந்த மினி லாரி வாகனத்தில் மோதி தம்பிதுரை விழுந்தபோது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்த மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் 108 அவசர ஊர்திக்கும், காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர்.
108 வாகனம் விரைந்து வந்து பரிசோதித்த நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து பாலுசெட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை காஞ்சிபுரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
அனகா காளமேகன்






