நியூஸ் 7 தமிழ் இணையளத்தில் வெளியான இளையராஜாவின் பேட்டியை, இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ட்விட்டரில் பகிர்ந்தது வரவேற்பை பெற்றுள்ளது.
இசை அமைப்பாளர் இளையராஜா, சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ’20 வருடத்துக்கு முன்பு போட்ட பாடல்களை இன்னும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு பாடல் என்பது அப்போது பூத்த மலர் மாதிரி இருக்க வேண்டும். பூத்த மலர் என்ன ஆகும் என்றால் ஓரிரு நாளில் சருகாகி உதிர்ந்துவிடும். ஆனால் பாடல் மலராகவே இருக்கும். இசையில் மொட்டில் இருந்து லேசாக விரியும் நிலையில் இருப்பதைத்தான் நீங்கள் ரசித்து கேட்க முடியும். இல்லையென்றால் பிரயோஜனம் இல்லை. எப்போது கேட்டாலும் அடடா புதிதாக இருக்கிறதே. இப்போதுதான் போட்டமாதிரி இருக்கிறதே என்று சொல்ல வேண்டும்.
புதிதாக இல்லையென்றால் பிரயோஜனம் இல்லை. மனது எப்போதும் புதிதை நோக்கித்தான் போகும். பழையதை திரும்பி பாக்காது. ஆனால் பழைய பாடல்களை மீண்டும் கேட்க காரணம் அது புதிதாக இருப்பதால்தான். மீண்டும் இசையமைக்கத்தான் புதிய ஸ்டூடியோ கட்டி இருக்கிறேன். இசைக்கலைஞர்கள் வருகிறார்கள். வாசிக்கிறார்கள். அதுபாட்டுக்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று கூறியிருந்தார்.
இந்தப் பேட்டி நியூஸ் 7 தமிழ் இணையதளத்தில் வெளியாகி இருந்ததது. இதை இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டரில் பகிர்ந்திருந்தார் . இது ஏ.ஆர்.ரகுமான் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது. இந்த ட்வீட்டை ஏராளமானவர்கள் ரீட்வீட் செய்திருந்தனர். நடிகர் தனுஷும் அதை ரீட்விட் செய்திருந்தார்.








