கோவையில், காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஒரு கவிதை எழுதி வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.
கோவையில் கடந்த மாதம் 23ஆம் தேதி காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்தார். உயிரிழப்பு படை தாக்குதலாக சொல்லப்படும் இந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக முதலில் மாநில காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், 6 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது என்ஐஏ அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டு இந்த வழக்கு குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மதம் vs மதம் என்ற பெயரில் கவிதை ஒன்றை எழுதியுள்ளார். அதில், மத வெறியால் ஏற்படும் விளைவுகள், படிப்பு மூலம் பகுத்தறிவை தேடு, இறைவன் பெயரில் எதுவும் செய்வோம் என்பது மூடத்தனம் உள்ளிட்ட பல்வேறு சிந்தனைகளை விதைக்கும் வகையில் வரிகளை புகுர்த்தியுள்ளார்.
“வெடிக்கச் செய்வது வீரம் அல்ல…
வெடிப்பு மூலம் வெறுப்பைத் தான் பெற முடியும்..
படிப்பு மூலம் பகுத்தறிவை தேடு..
மதம் பிடித்த யானைக்கு தேவை தனிமை…
மதம் பிடித்த மனிதனுக்கு தேவை கூட்டம்”
என்பது போன்ற வார்த்தைகள் அவரது கவிதை வரிகளில் இடம்பெற்றுள்ளது. மாநகர காவல் ஆணையர் எழுதியுள்ள இந்த கவிதை, காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் மத்தியிலும் கவனம் பெற்றுள்ளது. வீதி தோறும் நூலகம், ஆட்டோ நூலகம் என வாசிப்பு தொடர்பாகவும் பல்வேறு முன்னெடுப்புகளை அவர் எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.








