மத்திய அரசு ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு மூலதன செலவு கடன் திட்டத்தின் கீழ், மாநிலங்களுக்கு கடன் வழங்க முடிவு செய்துள்ளது. இதில், 45 சதவீத தொகை, முதல் காலாண்டிலேயே விடுவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொகை, அடிப்படை கட்டமைப்புகளுக்கு ஆதாரமான ரயில்வே, நெடுஞ்சாலைகள், மெட்ரோ ரயில், குடிநீர் வழங்கல் மற்றும் மின் திட்டங்களை செயல்படுத்த பயன்படுத்தப்படும். 2025-26-ம் நிதியாண்டில் இவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதி நாடு முழுவதும் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டன. அதாவது, ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரை மாநிலங்களுக்கு ரூ.40 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டது.
நடப்பு நிதியாண்டில், மத்திய அரசால் ஏற்கனவே ரூ.20 ஆயிரம் கோடி மாநிலங்களுக்கு வட்டியில்லா கடனாக வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் இறுதிக்குள் மேலும் ரூ.70 ஆயிரம் கோடி விடுவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதியைப் பெற மாநில அரசுகள், பழைய வாகனங்களை அழித்தல், நகர்ப்புற திட்டமிடல் மற்றும் நிதிச் சீர்திருத்தங்கள் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சாலைகள், மெட்ரோ ரயில், மின்சாரம், மற்றும் குடிநீர் திட்டங்கள் போன்ற முக்கியமான உள்கட்டமைப்பு மேம்பாடுகளுக்கு மாநில அரசுகளுக்கு ஆதரவளிப்பதாகும்.







