நவம்பர் 13ம் தேதிக்குள் புதிய முறையில் தட்டச்சு தேர்வு நடத்தி முடிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தொழில் நுட்ப கல்வி இயக்கம் சார்பில் தட்டச்சு தேர்வு ஆண்டு
தோறும் நடைபெற்று வருகிறது. இளநிலை மற்றும் முதுநிலை தட்டச்சு தேர்வு தாள்-1 தாள்-2 என்று 2 நிலைகளில் இருக்கும். கடந்த 75 ஆண்டுகளாக தட்டச்சு தேர்வில் தாள்-1 ஸ்பீடு தேர்வும், தாள் – 2 ஸ்டேட்மெண்ட் & லெட்டர் தேர்வும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்ட தேர்வு அறிவிப்பானது இளநிலை மற்றும்
முதுநிலை தேர்வில் தாள்-1ல் லெட்டர் & ஸ்டேட்மெண்ட், தாள்-2ல் ஸ்பீடும் இருக்கும் என்பது போன்று நிலையில் உள்ளது. எனவே, 75 ஆண்டுகளாக நடைபெறும் முறையில் தாள்-1ல் ஸ்பீட் தேர்வும், தாள் – 2ல் ஸ்டேட்மெண்ட் & லெட்டர் தேர்வும் நடைபெற உத்தரவிட வேண்டும் என மனு செய்யப்பட்டது.

இதனை விசாரித்த தனி நீதிபதி தமிழகத்தில் பழைய முறைப்படி தாள்-1ல் ஸ்பீடு
தேர்வும், தாள்-2ல் லெட்டர் & ஸ்டேட்மென்ட் தேர்வும் நடைபெறும் என உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து திருச்சி, தட்டச்சு பயிற்சி நிலைய உரிமையாளர் பிரவீன் குமார் என்பவர் மேல் முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் முந்தைய விசாரணையில் தமிழகத்தில் தட்டச்சு தேர்வு வழக்கம் போல் நடைபெறும் என தனி நீதிபதி உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மாணவர்களின் நலன் கருதி, தமிழகத்தில் தட்டச்சு தேர்வை புதிய முறைபடி தாள்-1ல் லெட்டர் & ஸ்டேட்மெண்ட் தேர்வும், தாள்-2ல் ஸ்பீடு தேர்வும் இருக்கும் வகையில் நவம்பர் 13ம் தேதிக்குள் நடத்தி முடிக்க தொழில் நுட்ப கல்வி இயக்கத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் தட்டச்சு பயிற்சி நிலையங்களில் கூட்டமைப்பு மற்றும் தொழில் நுட்ப கல்வி
இயக்கம் ஆகியோர் தட்டச்சு தேர்வை பழைய முறைப்படி நடத்துவதா? இல்லை புதிய முறைப்படி நடத்துவதா? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.







