வருங்காலத்தில் எம்பிக்களின் எண்ணிக்கை உயரும் என்றும், அதனை கருத்தில் கொண்டு புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்றம் அருகே ஆயிரத்து 250 கோடி ரூபாய் மதிப்பில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது. 4 மாடிகளுடன் கூடிய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் இன்று திறக்கப்பட்டது. புதிய கட்டடத்தின் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள சாவர்க்கர் உருவப்படத்திற்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைத்தொடர்ந்து, புதிய நாடாளுமன்றத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு, மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள், பல்வேறு மாநில முதலமைச்சர்கள் எழுந்து நின்று கைத்தட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த திறப்பு விழாவில் வெளிநாடு பிரதிநிதிகளும் பார்வையாளர்களாக பங்கேற்றனர்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோரின் வாழ்த்துரை வாசித்தார். பின்னர் புதிய நாடாளுமன்ற கட்டடம் குறித்த குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. இந்த குறும்படத்தில் தமிழ்நாட்டின் செங்கோலின் சிறப்புகள் மற்றும் சங்காராச்சியர்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றிருந்தன.
இதனை அடுத்து பேசிய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, உலகத்தில் இந்தியாவின் கௌரவம் உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். சவால்களை வாய்ப்பாக மாற்றும் திறன் நமது நாடாளுமன்றத்திற்கு உள்ளது எனவும் கூறினார். மேலும், நமது வலுவான எதிர்காலத்தின் அடித்தளம் ஜனநாயகம் எனக்கூறிய அவர், வேற்றுமையில் ஒற்றுமையே நமது பலம் என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து நாடாளுமன்ற திறப்பு விழாவையொட்டி 75 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். பின்னர் பேசிய பிரதமர் மோடி, நாடு சுதந்திரம் கிடைத்து 75வது ஆண்டு பொன்விழா கொண்டாடும் வேளையில் ஜனநாயகத்தின் புதிய கோயில் எழுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த புதிய நாடாளுமன்ற கட்டடம் சுய சார்பு இந்தியாவை ஒளிரச்செய்துள்ளது என கூறினார். புதிய புதிய நாடாளுமன்றம் வெறும் கட்டடம் அல்ல எனக்கூறிய பிரதமர், 140 கோடி இந்திய மக்கள் லட்சியத்தின் சின்னம் என கூறினார்.
மக்களவையில் புதிய செங்கோல் வைக்கப்பட்டுள்ளது என்றும், செங்கோலை கொண்டு வந்த ஆதீனங்களுக்கு தலைவணங்குகிறேன் எனவும் தெரிவித்தார். எப்போது விவாதம் நடந்தாலும் நமக்கு செங்கோல் நியாயத்தை நினைவுப்படுத்தும் எனக்கூறிய அவர், நல்லாட்சி, நல்ல நிர்வாகத்தையும் இந்த செங்கோல் நினைவுப்படுத்தி கொண்டே இருக்கும் என தெரிவித்தார்.
சுதந்திரத்திற்கு பிறகும் இந்தியா நிறைய இழப்புகளை சந்தித்தாலும் வளர்ச்சியின் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்றும், உலகை பிரமிக்க வைத்த வரலாறு நம்முடையது எனவும் கூறினார். புதிய நாடாளுமன்றம் காலத்தின் தேவை என்றும், காலத்தின் தேவை அறிந்து, கூடுதல் வசதிகளுடன் நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். கடந்த 9 ஆண்டுகளில் ஏழை மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறிய பிரதமர் மோடி தேசம் மற்றும் தேச மக்களின் வளர்ச்சியே தன்னுடைய குறிக்கோள் என கூறினார்.
- பி.ஜேம்ஸ் லிசா